தனுஷ் நடிப்பில் நேற்று பிரம்மாண்டமாக தமிழகமெங்கும் வெளியான ‘வாத்தி’ திரைப்படம் வெற்றிகரமாக தமிழகமெங்கும் ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் ஓடிக் கொண்டிருக்கின்றது.. பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கிய வாத்தி திரைப்படம் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மொழியிலும் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டு சார் என்ற பெயரில் தெலுங்கு மாகானங்களிலும் வெளியாகியுள்ளது. சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் பார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் தனுஷ் முதல் முறையாக தனுஷ் ஆசிரியராக நடித்துள்ளார். இவருடன் இணைந்து சம்யுக்தா, சமுத்திரக்கனி, சாய் குமார், ஆடுகளம் நரேன், இளவரசு, கென் கருணாஸ், மொட்ட ராஜேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையில் பாடல்கள் முன்னதாக வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் வாத்தி திரைப்படம் வெளியாகி ஒரு நாளை கடந்த நிலையில் அப்படத்தின் தயாரிப்பாளர் நாக வம்சி மற்றும் இயக்குனர் வெங்கி அட்லூரி தெலுங்கு பத்திரிக்கையாளரை சந்தித்து படம் குறித்து பேசினார். இதில் வாத்தி தெலுங்கு மொழியில் வெளியாகி அதன் களநிலவரம் குறித்த கேள்விக்கு தயாரிப்பாளர் நாக வம்சி விளக்கமளித்தார். அதன்படி அவர், "நல்ல வரவேற்பு சார் படத்திற்கு எல்லா இடத்திலும் கிடைத்து வருகிறது. விநியோகஸ்தர்கள் எல்லோரும் என்னை தொடர்ந்து அழைத்து படம் ஹவுஸ் புல் என்று சொல்கிறார்கள். முதல்காட்சியும் மிக பிரம்மாண்டமாய் பல திரையரங்குகளில் வெளியானதை பார்க்க முடிகிறது. சின்ன சின்ன பகுதிகளில் கூட சார் திரைப்படம் ஹவுஸ் புல்லாக இருக்கிறது. கடந்த ஆண்டு 'பீம்லா நாயக்', 'DJ தில்லு' வெளியானது. நல்ல விமர்சனம் கிடைத்தது எதிர்பார்த்த வசூல் கிடைக்கவில்லை. ஆனால் இந்த படத்திற்கு இரண்டுமே கிடைத்துள்ளது. எல்லா திரைகளிலும் காட்சிகள் முன்பதிவு நடந்து வருவதால் மகிழ்ச்சியடைகிறேன். ஹைதராபாத்தில் ஒரு நாளுக்கு 25 காட்சிகளும் ஆந்திராவில் ஏறத்தாழ 40 காட்சிகள் ஓடிக்கொண்டிருக்கிறது. எல்லாவற்றிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தனுஷ் தெலுங்கு திரைப்பயணத்தில் இது ஒரு முக்கியமான படமாக அமைந்துள்ளது. தனுஷ் நடிப்பில் முன்னதாக வெளியான 'ரகுவரன் BTech.,' திரைப்படத்தின் வசூலை முதல் நாளிலே கடக்க ஆயத்தமாகி கொண்டிருக்கிறது சார் திரைப்படம். தமிழிலும் வாத்தி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது" என்று குறிப்பிட்டார் தயாரிப்பாளர் நாக வம்சி.இந்த செய்தியையடுத்து தனுஷ் ரசிகர்கள் உற்சாகத்தில் கொண்டாடி வருகின்றனர்.