தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவராகவும் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களுக்கும் மிகப் பிடித்த நடிகராகவும் திகழும் நடிகர் சீயான் விக்ரம் கடந்த (2022) ஆண்டில் மகான், கோப்ரா, பொன்னியின் செல்வன் என அடுத்தடுத்து வித்தியாசமான படங்கள் நடித்து ரசிகர்களுக்கு விருந்து கொடுத்தார். அதிலும் குறிப்பாக இயக்குனர் மணிரத்னத்தின் கனவு படைப்பாக வெளிவந்த பொன்னியின் செல்வன் பாகம் 1 படத்தில் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் சீயான் விக்ரம் ரசிகர்களை தன் நடிப்பால் மிரள வைத்தார். அடுத்ததாக முதல் முறை இயக்குனர் பா.ரஞ்சித் அவர்களுடன் இணைந்துள்ள நடிகர் சீயான் விக்ரம் தற்போது தங்கலான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். கே ஜி எஃப் கதை களத்தை மையப்படுத்தி 1800 களின் காலகட்டத்தில் நடைபெறும் பீரியட் ஆக்சன் திரைப்படமாக தயாராகும் தங்கலாம் திரைப்படத்தை பிரம்மாண்டமான படமாக 3D தொழில்நுட்பத்தில் ஸ்டூடியோ கிரீன் சார்பில் KE.ஞானவேல் ராஜா அவர்கள் தயாரிக்கிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட தங்களால் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இதனிடையே பொன்னியின் செல்வன் பாகம் 2 திரைப்படம் வருகிற ஏப்ரல் 28ஆம் தேதி ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட உலக் எங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. புகழ்மிக்க எழுத்தாளர் கல்கி அவர்களின் ஈடு இணையற்ற படைப்பான பொன்னியின் செல்வன் நாவலை தழுவி இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக தயாராகி இருக்கும் பொன்னியின் செல்வனை மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா ப்ரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன. சீயான் விக்ரம், ஐஸ்வர்யா ராய், கார்த்தி, ஜெயம் ரவி. திரிஷா, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஜெயராம், ஐஸ்வர்ய லட்சுமி, அஸ்வின் காக்கமனு, இளைய திலகம் பிரபு, விக்ரம் பிரபு, லால், கிஷோர், ஜெயசித்ரா, ரஹ்மான் என மிகப் பெரிய நடிகர்கள் பட்டாளமே நடித்துள்ள பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். முன்னதாக பொன்னியின் செல்வன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் நேற்று மார்ச் 29ஆம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற்றது.

தொடர்ந்து வெளிவந்த பொன்னியின் செல்வன் படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடையே எக்கசக்கமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழாவிற்கு வந்திருந்த ரசிகர்களின் அன்பிற்கு நன்றி தெரிவித்து நடிகர் சீயான் விக்ரம் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், “பொன்னியின் செல்வன் 2 2 தங்கலான். கேஜிஎஃப்க்கு திரும்பிவிட்டேன். நள்ளிரவு வரை காத்திருந்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் எனது அன்பை தெரிவித்துக் கொள்கிறேன். மன்னிக்க வேண்டும் நான் மிகவும் தாமதமாக வந்தேன். உங்களால் மட்டுமே உணரக்கூடிய இந்த அளவற்ற அன்பிற்கு மிக்க நன்றி. நள்ளிரவு 12 மணி ஆனால் 5 மணிக்கு ஆரம்பித்த அதே உற்சாகம் அதே பூரிப்பு” என குறிப்பிட்டு தனது புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் சீயான் விக்ரமின் அந்தப் பதிவு மற்றும் புகைப்படம் இதோ…