ஒரு நாள் கூத்து திரைப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். தொடர்ந்து தமிழில் டிக்..டிக்..டிக்… , திமிரு புடிச்சவன், சங்கத்தமிழன் உள்ளிட்ட திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு திரையுலகிலும் கதாநாயகியாகவும் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்து வரும்கிறார் நிவேதா பெத்துராஜ்.

ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுன் உடன் இணைந்து அல வைகுண்டபுரம்லோ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிவேதா பெத்துராஜ் ,தமிழில் நடிகர் அருண் விஜய் நடிப்பில் இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான தடம் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக் படமான RED படத்திலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் வசித்து வரும் நடிகை நிவேதா பெத்துராஜ் நேற்று SWIGGY செயலியில் ஆன்லைனில் உணவை ஆர்டர் செய்துள்ளார். ஆனால் டெலிவரியான உணவில் கரப்பான்பூச்சி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக இது குறித்து SWIGGY நிறுவனத்தில் புகாரும் பதிவு செய்துள்ளார். நிவேதா பெத்துராஜ் கொடுத்த புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட உணவகத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஸ்விக்கி நிறுவனத்திடம் இருந்து பதில் அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து தனது சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.

அதில், “இது மாதிரியான உணவகங்கள் எந்த அளவில் சுத்தத்தை பின்பற்றுகிறார்கள். ஏற்கனவே இரண்டு முறை இதேபோல் இரண்டு முறை நடந்துள்ளது. உணவில் கரப்பான்பூச்சி இருக்கும் புகைப்படத்தை இதோடு இணைத்திருக்கிறேன். இது போன்று செயல்படும் உணவகங்களின் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க அனைவரும் இதுபற்றி பேச முன்வர வேண்டும்” என தெரிவித்து அந்த தனியார் உணவகத்தின் பெயரையும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இதேபோல இந்த உணவகத்தின் அதிருப்தியான அனுபவங்களை பகிர்ந்து கொண்டவர்களின் கமெண்ட்களையும் இணைத்துள்ளார். பிரபல இளம் நடிகை நிவேதா பெத்துராஜ் ஆடர் செய்த உணவில் கரப்பான்பூச்சி வந்த விவகாரம் தற்போது பரபரப்பை ஏற்ப்புத்தியுள்ளது.