நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிராக வியாபாரிகள் சங்கம் போராட்டத்தை அறிவித்துள்ளது.

தமிழ் சினிமாவின் பிரபல நடிகராகத் திகழும் விஜய் சேதுபதி, தற்போது விளம்பம் படம் ஒன்றில் நடித்து வருகிறார்.

அதாவது, இணைய விற்பனை நிறுவனம் ஒன்று, விரைவில் தமிழ்நாட்டில் உள்ள பலசரக்கு பொருட்களை மொத்தமாகவோ அல்லது சில்லறையாகவோ விற்க முடிவு செய்துள்ளது. அந்த நிறுவனத்தின் விளம்பரத்தில் தான், நடிகர் விஜய் சேதுபதி நடித்திருக்கிறார்.

அந்த விளம்பரம் தொலைக்காட்சிகளில் பலமுறை ஒளிபரப்பு செய்யப்பட்டு, வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் விவாதமாக மாறிவிட்டது. குறிப்பாக, இந்த விளம்பரத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்தது, சிறு குறு வியாபாரிகள் மத்தியில் கடும் விமர்சனங்களை எழுப்பி உள்ளது.

இதனால், நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிராக வரும் 4 ஆம் தேதி காலை 10 மணி அளவில், வளசரவாக்கத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் போராட்டம் நடத்தப்போவதாக வியாபாரிகள் சங்கம் அதிரடியாக அறிவித்துள்ளது.

இலங்கை வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்படும் திரைப்படத்தில், நடிகர் விஜய் சேதுபதி நாயகனாக நடிப்பதற்கு, தமிழ் ஆதரவாளர்கள் இடையே கடந்த மாதம் கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், தற்போது பலசரக்கு விளம்பரத்தில் நடித்ததின் மூலம் தமிழக சிறு குறு வியாபாரிகள் மத்தியிலும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.