பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் இருவர் மீதான குண்டர் சட்டத்தை, சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்துள்ளது.

பலநூறு பெண்களை மிரட்டி ஆபாசம் எடுத்து, அவர்களை பாலியல் பலாத்காரம் செய்து, பிறகு அவர்களிடம் பணம் கேட்டு ஒரு கும்பல் மிரட்டி வருவதாக, கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு அதிர்ச்சிக்குரிய செய்தி வெளியாகி, தமிழ்நாட்டையே கொந்தளிக்க வைத்தது.

pollachi sexual abuse case

இந்தியாவையே அதிர வைத்த இந்த வழக்கில், 7 பேர் வரை அதிரடியாகக் கைது செய்யப்பட்டனர். குறிப்பாக, இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு, சபரிராஜன் உள்ளிட்ட 4 பேரைக் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய, கடந்த மார்ச் மாதம் கோவை மாவட்ட ஆட்சியர் அதிரடியாக உத்தரவிட்டிருந்தார். 

இதனையடுத்து, முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு, சபரிராஜன் உள்ளிட்ட 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

pollachi sexual abuse case

இதனிடையே, இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி திருநாவுக்கரசு தாய் பரிமளா, சபரிராஜன் தாய் லதா ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தனர். 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுந்தரேஷ் மற்றும் டீக்காராமன் அடங்கிய அமர்வு, குண்டர் சட்டத்தில் அடைத்துப் பிறப்பித்த உத்தரவு தொடர்பான ஆவணங்களில் தெளிவில்லை என்றும், அந்த ஆவணங்களைக் கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்களுக்கு முறையாக வழங்கப்படவில்லை என்றும் கூறி, திருநாவுக்கரசு மற்றும்  சபரிராஜன் ஆகிய இருவர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

pollachi sexual abuse case

தொடர் குற்றங்களைச் செய்தவர்கள் தான், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள். அந்த வகையில், மிரட்டி ஆபாசப்படங்கள் எடுக்கப்பட்ட பல நூறு பெண்கள் பற்றிய விபரங்கள் வெளியே தெரிந்துவிடக்கூடாது என்ற அடிப்படையில்தான், திருநாவுக்கரசு உள்ளிட்ட 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது குறிப்பிடத்தக்கது.