திருவண்ணாமலையில் இன்று மாலை மகா தீபம் ஏற்றப்படுகிறது.

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 1 ஆம் தேதி, கொடியேற்றத்துடன் தொடங்கிச் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

அதன்படி, பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் கோயிலில் அதிகாலை 4 மணிக்கு, கோயில் கருவறையில் பரணி தீபம் மிகச் சிறப்பாக ஏற்றப்பட்டது.

பரணி தீபம் ஏற்றப்படுவதின் தாற்பரியமே, “ஏகன் அனேகன் ஆகி, அனேகன் மீண்டும் ஏகன் ஆக மாறும் தத்துவம்” என்று நம்பப்படுகிறது. அதன்படி, ஒரு தீபத்திலிருந்து 5 தீபங்கள் ஏற்றப்பட்டு, பின்னர் மீண்டும் அந்த தீபத்திலிருந்து ஒரே தீபமாகப் பரணி தீபம் ஏற்பட்டது. இதன் மூலம் “ஏகன், அனேகன் தத்துவம் இன்று நிகழ்த்தப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக இன்று மாலை மிகச் சரியாக 6 மணிக்கு, கோயிலின் பின்புறமுள்ள சுமார் 2668 அடி உயரம் கொண்ட மலை உச்சியில்
மகா தீபம் ஏற்றப்படுகிறது.

மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும்போது, வருடத்திற்கு சில நிமிடங்கள் மட்டும் காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர், இன்று அண்ணாமலையார் கோயிலின் கொடிமரம் முன்பு எழுந்தருளுகிறார். அத்துடன், தீப தரிசன மண்டபத்தில் பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்கள்.

இதனிடையே, அண்ணாமலையார் ஆலயத்தில் இன்று மாலை மகா தீபம் ஏற்றப்படுவதை முன்னிட்டு, சுமார் 25 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால், பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனால், திருவண்ணாமலை முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.