கள்ளக் காதல் மோகத்தால் மனைவி கணவனைக் கொன்ற நிலையில், போலீசாருக்கு பயந்து கள்ளக் காதலன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகில் உள்ள சோழியம் பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த முருகன், கடந்த 12 ஆம் தேதி, மர்மமான முறையில் வீட்டிலேயே வெட்டி படுகொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், கொலைக் குற்றவாளிகள் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது, கொலை செய்யப்பட்ட முருகனின் மனைவி தேவி மீது, போலீசாருக்கு சந்தேகம் வந்தது.

இதனையடுத்து, அவரது தொலைப்பேசி அழைப்புகளை ஆய்வு செய்ததில், தேவிக்கு வினோத் என்பவருடன் பழக்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து தேவியிடம் போலீசார் நடத்திய விசாரணையில், கள்ளக் காதலைக் கணவர் தட்டிக்கேட்டதால், கள்ளக் காதல் மோகத்தால் தன்னுடைய ஆண் நண்பருடன் சேர்ந்து, கணவனை வெட்டி கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து, தேவியை போலீசார் கைது செய்தனர்.

மேலும், தேவியின் கள்ளக் காதலன் வினோத்தை போலீசார் கைது செய்ய முயன்றபோது, அவர் போலீசாருக்கு பயந்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையடுத்து, வினோத்தை மீட்ட போலீசார், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதனிடையே, கள்ளக் காதல் மோகத்தால் ஆண் நண்பருடன் சேர்ந்து மனைவியே, கணவனைக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.