தேனியில் பள்ளி வகுப்பறையில் மாணவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தேனி அல்லிநகரம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப்பள்ளியில் 17 வயது திருமால் என்ற மாணவர் பிளஸ் 2 படித்து வந்தார். இந்நிலையில், நேற்று மாலை பள்ளி வகுப்பறையில், அதே வகுப்பைச் சேர்ந்த சக்திவேல் என்ற மாணவர் விளையாட்டாகத் திருமாலின் இடுப்பைக் கிள்ளி விளையாடி உள்ளார்.

அப்போது, இரு மாணவர்களுக்கும் இடையே சண்டை வந்துள்ளது. இதனால், சக்திவேல், விளையாட்டாகச் சண்டை போட்டதாக தெரிகிறிது. அப்போது, மாணவன் சக்திவேல் தாக்கியதில், திருமால் அங்கேயே மயங்கி கீழே விழுந்துள்ளார். இதைப் பார்த்த சக மாணவர்கள், கூச்சல் போட்டதையடுத்து, ஆசிரியர் ஓடிவந்து மாணவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மாணவனைப் பரிசோதித்த மருத்துவர்கள், மாணவன் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

இந்த தகவல் அந்த ஊர் முழுவதும் பரவிய நிலையில், திருமாலின் உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, விரைந்து வந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, 17 வயதுடைய சக்திவேலைக் கைது செய்தனர்.

இதனிடையே, தேனியில் பள்ளி மாணவர்கள் விளையாட்டாகப் போட்ட சண்டை, விபரீதத்தில் முடிந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.