பலாத்காரம் செய்ய முயன்ற தந்தையின் தலையில் அம்மி கல்லைப் போட்டு மகள் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டம் ராஜாகோவில் பகுதியைச் சேர்ந்த படவெட்டி என்பவருக்கு திருமணமாகி தனா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.

இதனிடையே, படவெட்டி கடந்த சில வருடங்களாகச் சரியாக வேலைக்குச் செல்லாமல் மதுபோதைக்கு அடிமையாகி உள்ளார்.

இதனால், கணவன் - மனைவி இருவருக்கும் இடையே பிரச்சனை எழுந்த நிலையில், மனைவி தன் 2 பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு, அருகில் உள்ள தனது அம்மா வீட்டிற்கு சென்றுள்ளார்.

ஆனாலும், தினமும் குடித்துவிட்டு வந்து, மனைவியின் அம்மா வீட்டிற்குச் சென்று அவருடன் சண்டை போடுவதைப் படவெட்டி வழக்கமாகக் கொண்டிருந்தார்.

சம்பவத்தன்று, குடிபோதையில் மனைவி வீட்டிற்குச் சென்ற படவெட்டி, அங்கு இருந்த தன் மகளைக் கட்டி அணைக்க முயற்சி செய்து, பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாகக் கூறப்படுகிறது.

இதனால், ஆத்திரமடைந்த மகள், வீட்டிலிருந்த அம்மி கல்லை எடுத்து, தந்தையின் தலையில் போட்டுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரித்த அவர், அங்கேயே உயிரிழந்தார்.

இது குறித்து, ஜலகண்டபுரம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, கொலை செய்த மகளையும், அவரது தாயார் தனாவையும் கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, மது போதையில் பெற்ற மகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட தந்தையை, அவரது மகளும் மனைவியும் சேர்ந்து அம்மி கல்லைப் போட்டு கொலை செய்துள்ள சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.