ஊரடங்கு முடிந்த பிறகு, உடனடியாக சில விஷயங்களை செய்யக்கூடாது என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

கொரோனா வைரஸ் பரவலால், தமிழகம் உட்பட நாடு முழுவதும் 2 வது முறையாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்தம் 40 நாட்கள் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது.

இதனால், சிறைக்குள் அடைபட்ட பறவையாய் பலரும், வீட்டிற்குள்ளேயே முடங்கி இருக்கிறார்கள். தான் நினைத்த காரியத்தைச் செய்ய முடியாமலும், நினைத்த இடத்திற்குச் செல்ல முடியாமலும் பலரும் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில், மே 3 ஆம் தேதியுடன் ஊரடங்கு உத்தரவு முடியும் நிலையில், பலரும் தற்போது தடைப்பட்ட விசயங்களை உடனடியாக செய்து முடிக்க வேண்டும் என்றும், பலரும் மிகப் பெரிய பட்டியலே வைத்திருப்பார்கள்.

இதனால், தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனோ தடுப்பு நடவடிக்கைகளை, ஊரடங்கு முடிந்த பின்பும் தொடர வேண்டும் என்று அரசும், மருத்துவர்கள் அறிவுறுத்தத் தொடங்கி உள்ளனர்.

அதன்படி, ஊரடங்கு முடிந்த பின்பும் அவ்வப்போது கை கழுவும் பழக்கத்தைத் தொடர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஊரடங்கிற்கு முடிந்த பின்பும், வெளியே செல்லும்போது முக கவசம் கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என்றும், இருமல், தும்மல் வரும்போது கைக்குட்டை அல்லது கைகளால் முகத்தை மூடுவதைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

வீடுகளில் உடனடியாக பெரிய அளவிலான சுப நிகழ்ச்சிகளை நடத்தி, உறவினர்களை அதிக அளவில் வரவதை தவிர்ப்பது நல்லது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேபோல், கூண்டுக்குள் அடைக்கப்பட்டு இருந்த பறவை, கூண்டைத் திறந்ததும் சிறகடித்துப் பறப்பதுபோல சுற்றுலா செல்ல கிளம்பிச் சென்றுவிடக் கூடாது.

பார்ட்டிகளில் பங்கேற்பது, கேளிக்கை விஷயங்களில் கலந்துகொள்வது, பார் மற்றும் கிளப் போன்ற இடங்களுக்குச் செல்வதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.

காதலியுடன் முத்தம், ரொமன்ஸ் ஆகியவற்றையும் தவிர்ப்பது நல்லது.

ஏனெனில், கொரோனா வைரஸ் எங்கேனும் இருக்கக் கூடும். அல்லது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கக் கூடும் என்பதால். பொதுமக்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு கருதி, சில குறிப்பிட்ட விஷயங்களை அனைவரும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.