தமிழகத்தில் ஆம்னி பேருந்து பயண கட்டணம் இரு மடங்காக உயர்த்துவதாகத் தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அப்சல் தெரிவித்துள்ளார்.

கொரோனா தாக்கம் காரணமாக, தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி முதல் அனைத்து விதமான போக்குவரத்துகளும் முடக்கப்பட்டன.

அத்துடன், பொதுமக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்றும், அத்திவாசிய தேவைகளுக்கு மட்டுமே வீட்டைவிட்டு வெளியே வர வேண்டும் என்றும் அரசு கூறியிருந்தது.

இதனால், அனைத்து தரப்பு தொழில்களும் கடுமையாகப் பாதித்து, மிகப் பெரிய இழப்பை சந்தித்துள்ளன. இவற்றுடன் பொதுமக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டதுடன், நாட்டின் பொருளாதாரமும் மிக கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளன.

இதனால், பாதிப்பை சரிசெய்யும் நோக்கில், சில பொருட்களின் விலை தற்போதே உயர்த்தி விற்கப்படத் தொடங்கி உள்ளன.

இதனிடையே, நாடு முழுவதும் ரயில் சேவைக்கான முன்பதிவு தொடங்கிய நிலையில், நாடு முழுவதும் ஜூன் 30 வரை அனைத்து பயணிகள் ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், ஊரடங்கிற்குப் பின் தமிழகத்தில் ஆம்னி பேருந்து பயண கட்டணம் இரு மடங்காக உயர்த்தப்படும் என்று, தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அப்சல் கூறியுள்ளார்.

ஊரடங்கிற்குப் பிறகும், தனி மனித இடைவெளியை நிச்சயம் கடைப்பிடிக்க வேண்டும் என அரசு உத்தரவிடப்பட்டிருப்பதால், பேருந்துகளில் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட பயணிகள் அளவைவிட, பாதி அளவிலேயே பயணிகளை ஏற்றும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு கடும் நஷ்டம் ஏற்படும் என்று கூறப்படுகிறது.

இதன் காரணமாக, ஒரு கிலோமீட்டருக்கு 1.60 ரூபாய் என கட்டணம் இருந்த நிலையில், 3.20 ரூபாயாக கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், ஊரடங்கு முடிந்து பேருந்து சேவை தொடங்கும்போது, இந்த புதிய கட்டணம் அமலுக்கு வரும் என்றும், தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அப்சல் தெரிவித்துள்ளார்.