3 வயது குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாகக் கொன்றவருக்குத் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

ஒடிசா மாநிலம் கியோஜிஹார் மாவட்டத்தில் உள்ள சாங்சாங் பகுதியைச் சேர்ந்த 20 வயதான சுனில் குமார் நாயக், தனது உறவினரின் மகளான 3 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து, கழுத்தை நெரித்துக் கொடூரமான முறையில் கொலை செய்தார்.

இது தொடர்பாகச் சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், சுனில் குமார் நாயக்கை போக்சோ சட்டத்தின் கீழ், போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த பாலத்கார கொலை சம்பவம் தொடர்பாக, சாம்புவா மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. தற்போது, அனைத்து தரப்பு வாதங்களும் விசாரித்து முடிக்கப்பட்ட நிலையில், சுனில் குமார் நாயக் மீதான குற்றச்சாட்டு, உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து, தீர்ப்பு வழங்கிய நீதிபதி, சுனில் குமார் நாயக்கை, தூக்கில் போட அதிரடியாக உத்தரவிட்டார். தீர்ப்பைக் கேட்டு அதிர்ச்சியடைந்த குற்றவாளி சுனில் குமார், “நான் நிரபராதி என்றும்,தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வேன்” என்றும் கூறினார்.

இதனிடையே, ஒடிசாவில் கடந்த 6 மாதங்களில், குழந்தைகள் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்குகளில், இது வரை 6 பேருக்குத் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.