ஊரடங்கு நீட்டிக்கப்படுவது குறித்து, ஆலோசனை நடத்த மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி மாலை முதல் பொது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

அதன்படி முதலில் 21 நாட்கள் பிறப்பிக்கப்பட்ட நிலையில், கொரோனா வைரஸ் கட்டுக்குள் வராமல் மேலும் பரவத்தொடங்கியது. இதனால், அனைத்து மாநில முதலமைச்சர்களுடனும், பிரதமர் மோடி அடுத்தடுத்து ஆலோசனை மேற்கொண்டு, கடந்த மே மாதம் 3 ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்தார். அத்துடன், பல்வேறு பணிகளுக்குத் தளர்வுகளையும் மத்திய அரசு அடுத்தடுத்து அறிவித்து வந்தன.

இதனைத்தொடர்ந்து, அடுத்தடுத்த நாட்களிலும் கொரோனா வைரசின் வீரியல் மேலும் அதிகரித்து, தொடர்ந்து பரவத் தொடங்கியதால், மீண்டும் அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார்.

அதன்படி, மே 4 ஆம் தேதி முதல் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கை மத்திய அரசு நீட்டித்தது. இதனால், வரும் 17 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது.

இந்நிலையில், நாடு முழுவதும் ஒரு பக்கம் கொரோனா பரவல் சற்று அதிகரித்துக் காணப்பட்டாலும், இன்னொரு பக்கம் கொரோனாவால் குணமடைந்து வீடு திரும்போர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இதனால், வரும் 17 ஆம் தேதிக்குப் பிறகு, கொரோனா வைரசின் தாக்கம் எப்படி இருக்கும் என்பது பற்றியும், ஊரடங்கை இன்னும் நீட்டிக்கலாமா? அல்லது தளர்வு அளிக்கலாமா? என்பது குறித்தும் அனைத்து மாநில முதலமைச்சர்களுடன், பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்த உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதன்படி, ஊரடங்கு காலத்தில், அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி மேற்கொள்ளும் 5 வது ஆலோசனைக் கூட்டமாக இது அமைய உள்ளது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தங்களுடைய மாநிலங்களின் நிலை குறித்தும், மாநிலங்களில் இனி மேற்கொள்ள பணிகள் மற்றும் ஊரடங்கு தொடர்பாகவும் அனைத்து மாநில முதலமைச்சர்களும், பிரதமர் மோடி உடன் பேச உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.