“காலில் விழட்டுமா... வீட்டு பத்திரம் வேண்டும் என்றாலும் தரேன்.. ஒரு குவார்ட்டர் தாங்க ப்ளீஸ்” என்று, மதுபிரியர் ஒருவர் கெஞ்சி கேட்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாகப் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கில், டாஸ்மாக் கடையும் சேர்த்து மூடப்பட்டன. அத்துடன், வரும் 17 ஆம் தேதி வரை 3 வது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையில், 43 நாட்களுக்குப் பிறகு சில தளர்வுகளை அறிவித்த தமிழக அரசு, டாஸ்மாக் கடையையும் திறக்க உத்தரவு பிறப்பித்தது.

இதனிடையே, கடந்த 2 நாட்களாக டாஸ்மாக் கடைகள் தமிழகத்தில் திறந்திருந்த நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது.

இந்நிலையில், ஈரோட்டைச் சேர்ந்த மதுப்பிரியர் ஒருவர், ஒரே ஒரு குவார்ட்டருக்காக கெஞ்சி பேசிய வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

ஈரோட்டில் உள்ள ஒரு டாஸ்மாக் கடை முன்பு, மது வாங்க வந்த கூலித்தொழிலாளி ஒருவர், "என்னிடம் எல்லா ஆதாரங்களும் உள்ளது. வீட்டு பத்திரம் வேண்டுமானாலும் தருகிறேன். எனக்கு மது சரக்கு தாங்க” என்று கேட்டுள்ளார்.

மேலும், “கொரோனாவால் இரண்டு மாதங்களாகச் சரக்கு அடிக்காமல் கை, கால்கள் நடுங்க ஆரம்பித்துவிட்டன. தூக்கம் வரவில்லை. டாஸ்மாக் திறப்பது தெரிந்ததும், ஆயிரம் ரூபாய் சம்பளத்தை விட்டுவிட்டு வந்திருக்கிறேன். வீட்டு பத்தரம் தர வேண்டுமா? ஆதார் கார்டு வேண்டுமா? யார் காலில் விழ வேண்டும்?

தயவு செய்து ஒரு குவார்ட்டர் மட்டும் கொடுங்க ப்ளீஸ். எங்களால், அரசாங்கம் நஷ்டமடையக் கூடாது" என்று, அந்த கூலி தொழிலாளி கெஞ்சி கேட்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.