கள்ளக் காதலால் பால் வியாபாரி நள்ளிரவில் வீடு புகுந்து வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

மதுரை மாவட்டம் மேல அனுப்பானடி பகுதியைச் சேர்ந்த ரமேஷ், அந்த பகுதியில் பால் வியாபாரம் செய்து வந்தார். ரமேஷ், ஏற்கனவே திருமணம் ஆன நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக, மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில், ரமேஷ்க்கும் அதே பகுதியைச் சேர்ந்த வேறொரு பெண்ணுக்கும் இடையே தகாத உறவு இருந்ததாகத் தெரிகிறது. இது குறித்து, அந்த பெண்ணின் அண்ணன் செல்வம், சிலமுறை ரமேஷிடம் வந்து தகராறு செய்துள்ளார். ஆனால், இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாத ரமேஷ், கள்ளக் காதலைத் தொடர்ந்துள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த செல்வம், ரமேஷை கொலை செய்ய திட்டம்போட்டார். அதன்படி, அவரை சில நாட்களாகச் செல்வம் நோட்டமிட்டார்.

இந்நிலையில், நள்ளிரவில் வீட்டில் ரமேஷ் தனியாகத் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது, செல்வம் மற்றும் அவரது நண்பர்கள் சிலர், வீடு புகுந்து, ரமேஷை சராமாரியாக வெட்டி உள்ளனர். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த ரமேஷ், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து, அவர்கள் தப்பிச் சென்றனர்.

இது தொடர்பாக போலீசாருக்கு காலையில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, விரைந்து வந்த போலீசார், உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப் பவுதி செய்து போலீசார், தலைமறைவான செல்வம் மற்றும் அவரது நண்பர்களைத் தேடி வருகின்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.