முறையற்ற காதலுக்குப் பெற்றோர் கடும் எதிர்ப்பு.. காதல் ஜோடி எடுத்த விபரீத முடிவு
By Arul Valan Arasu | Galatta | 01:04 PM
முறையற்ற காதலுக்குப் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், காதல் ஜோடி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டனர்.
கடலூர் மாவட்டம் தொரப்பாடி கிராமத்தைச் சேர்ந்த பாண்டுரங்கன் மகள் 18 வயதான சுவாதி, அங்குள்ள தனியார் நிர்சிங் கல்லூரியில் படித்து வந்தார். அதேபோல், அந்த பகுதியின் அருகில் உள்ள கோட்லாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஆதிமூலத்தின் மகன் 22 வயதான மதன் கல்லூரி படிப்பை முடித்த நிலையில், வேலைக்கு முயற்சித்துக்கொண்டு இருந்தார்.
இந்நிலையில், இவர்கள் இருவரும் கடந்த சில வருடங்களாகக் காதலித்ததாகத் தெரிகிறது. இது குறித்து, இருவரும் தங்கள் வீட்டில் கூறி, தங்களுக்குத் திருமணம் செய்து வைக்க வலியுறுத்தி உள்ளனர்.
அப்போது, காதலன் மதன், சுவாதியின் தந்தை பாண்டுரங்கனின் அண்ணன் மகன் என்பது தெரியவந்தது. இதனால், இருவரும் அண்ணன் - தங்கை என்ற உறவுமுறை வருவதாகத் தெரிவித்து, முறையற்ற காதலுக்கு இருவீட்டிலும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இதனால், மனமுடைந்த காணப்பட்ட காதலர்கள் இருவரும், பண்ருட்டி அருகில் உள்ள கணிசப்பாக்கம் ரயில்வே கிராஸில், ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டனர். இதனால், அவர்கள் இருவரின் உடல்களும், ரயிலில் அடிபட்டு, நாலா புறமும் சிதறிக்கிடந்தது.
இது குறித்து விரைந்து வந்த போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பும், சோகமும் ஏற்பட்டது.