சக பள்ளி மாணவிக்குக் குளிர்பானத்தில் மது கலந்து கொடுத்து, கூட்டு பலாத்காரம் செய்த மாணவன் ஒருவன் கைது செய்யப்பட்ட நிலையில், 2 மாணவர்கள் தலைமறைவாகி உள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளியில் செயல்படும் அரசு மகளிர் பள்ளியில் படித்து வரும் 11 ஆம் வகுப்பு மாணவி ஒருவர், மாலை பள்ளி முடிந்து வீட்டிற்குச் செல்வதற்காக, அங்குள்ள பேருந்து நிலையத்தில் நின்றுகொண்டு இருந்தார்.

அப்போது, அந்த பகுதியில் உள்ள மற்றொரு அரசுப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படிக்கும் திம்மசந்திரம் கிராமத்தைச் சேர்ந்த 16 வயது இளைஞர் ஒருவர் வந்துள்ளார்.

இவர்கள் இருவரும் ஏற்கெனவே படித்த பள்ளியில், சேர்ந்து படித்தபோது நண்பர்கள் என்பதால், இயல்பாக, அந்த இளைஞரிடம் அந்த மாணவி பேசி உள்ளார்.

அந்த நேரத்தில் அந்த இளைஞரின் நண்பர்களான ராஜா, மஞ்சுநாத் ஆகிய இருவரும் மது போதையில், அங்கு எதார்த்தமாக வருவது போல் வந்து, இந்த இளைஞரிடம் பேச்சுக் கொடுத்துள்ளனர்.

அப்போது, அந்த இளைஞரும், அந்த 2 நண்பர்களையும், அந்த மாணவிக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். இதனையடுத்து, அந்த நண்பர்கள் கையில் வைத்திருந்த மது கலந்து குளிர்பானத்தை, அந்த மாணவியிடம் கொடுத்துக் குடிக்க வைத்துள்ளனர்.

மாணவி அதைக் குடித்த சிறிது நேரத்தில் மயங்கி உள்ளார். இதனையடுத்து, அந்த மாணவியை காரில் கடத்திச் சென்று, நண்பர் ஒருவர் வீட்டிற்கு அழைத்துச் சென்று 3 பேரும் மாறி மாறி ஆசை தீர பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

ஒரு கட்டத்தில், பாலியல் பலாத்காரத்தால் உடலில் வலி ஏற்படவே, மயக்கம் தெளிந்து, மாணவி கண் விழித்துள்ளார். அப்போது, தான் ஏமாற்றப்பட்டுக் கடத்தப்பட்டு, பலாத்காரத்திற்கு ஆளானதாக உணர்ந்த அந்த மாணவி, அங்கிருந்து எப்படியோ தப்பி வீட்டிற்குச் சென்றுள்ளார்.

அங்கு, தனது பெற்றோரிடம் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து அழுதுகொண்டே கூறியுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர், அங்குள்ள கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், முதலில், மாணவியின் நண்பன் என்று கூறப்படும் 11 ஆம் வகுப்பு மாணவனைக் கைது செய்தனர்.

இதனையடுத்து, அந்த மாணவர் அளித்த தகவலின் பேரில், மற்ற இருவரும் ராஜா, மஞ்சுநாத் என்பது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து, தலைமறைவான அவர்கள் இருவரையும் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

மேலும், இவர்கள் 3 பேரும் சேர்ந்து ஏற்கனவே திட்டமிட்டே அந்த மாணவியை அவர்கள் கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்ததும், விசாரணையில் தெரியவந்தது.