3 மணி நேரத்தில் 18 செல்போன்களை திருடிய ஜகர்தல கில்லாடி திருடன்!
By Aruvi | Galatta | 01:24 PM
சென்னையில் 3 மணி நேரத்தில் 18 செல்போன்களை பறித்துச் சென்ற திருடனை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர்.
சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த பாலாஜி, தன்னுடைய சக கூட்டாளி திருடனுடன், விலை உயர்ந்த இருசக்கர வானத்தில் திருவொற்றியூர் முதல் தேனாம்பேட்டை வரை மெயின் ரோட்டில் ரைடு சென்றுள்ளனர்.
அப்போது, திருவொற்றியூர் முதல் தேனாம்பேட்டை வரை வழி நெடுகிலும் சாலையில் போன் பேசிக்கொண்டு சென்ற 18 பேரிடம், செல்போனை பிடிங்கிகொண்டு, தப்பி ஓடி உள்ளனர்.
இறுதியாக, தேனாம்பேட்டை பார்க் ஓட்டல் அமைந்துள்ள பகுதியில், அந்த திருடர்கள் வந்தபோது, சாலையில் சிலர் போன் பேசியபடியே நடந்து சென்றுகொண்டிருந்தனர்.
அவர்களிடம் செல்போனை பிடிங்கிகொண்டு, அந்த திருடர்கள் தப்பி ஓடியுள்ளனர். அப்போது, பொதுமக்கள் சிலர் திருடர்களை விடாமல் துரத்திச் சென்றனர். ஆனால், திருடர்கள் வேகமாகச் சென்றதால், பொதுமக்களால் வேகமாக ஓடமுடிவில்லை.
இந்நிலையில், காரில் வந்த ஒரு வாகன ஓட்டுநர், அவர்களை முந்திச் சென்று, தனது காரை அவர்களின் இருசக்கர வாகனத்தின் முன்பு நிறுத்தி உள்ளார். இதனால், திருடர்கள் இருவரும் நிலை தடுமாறி உள்ளனர்.
அந்த நேரத்தில் துரத்தி வந்தவர்கள், இரு திருடர்களில் ஒருவனை பிடித்தனர். ஆனால், அதற்குள் மற்றொருவர் தப்பி ஓடியுள்ளார்.
இதனையடுத்து, பிடிப்பட்டனை பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து, போலீசாரிடம் ஒப்படைத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், அவர்களிடம் நடத்திய விசாரணையில், கடந்த 3 மணி நேரத்தில், திருவொற்றியூர் முதல் தேனாம்பேட்டை வரை, வழி நெடுகிலும் சுமார் 18 பேரிடம் செல்போனை பறித்தது தெரியவந்தது.
மேலும், சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு, செல்போன்களை திருடி வந்ததாகவும் அவன் வாக்குமூலம் அளித்துள்ளான்.
அத்துடன், தற்போது பிடிபட்ட பாலஜி, கடந்த 5 வருடங்களுக்கு முன்பு, இதேபோல், செல்போன் பறிப்பு வழக்கில் கைதாகி சிறைத் தண்டனை அனுபவித்து வந்தது குறிப்பிடத்தக்கது.