திருமண அழைப்பிதழ் கொடுக்க வந்தவர்களைக் கொன்று புதைத்த அக்கா - மருமகன் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கரூர் மாவட்டத்தில் நிதி நிறுவனம் நடத்தி வந்த செல்வராஜ், தனது மகன் திருமணம் விசயமாக உறவினர்களுக்கு அழைப்பிதழ் கொடுத்து வந்தார். இந்நிலையில், வெள்ளகோவிலில் உள்ள அக்காவிற்குத் திருமண அழைப்பிதழ் கொடுக்க தனது மனைவி வசந்தா மணியுடன் காரில் சென்ற செல்வராஜ் வீடு திரும்பவில்லை.

இது தொடர்பா செல்வராஜின் மகன் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனையடுத்து, செல்வராஜ் சென்ற கார், கரூர் - மதுரை சாலையில் நின்றுகொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, போலீசார் தங்களது விசாரணையைத் தீவிரப்படுத்தினர்.

அதன்படி, செல்வராஜின் அக்கா கண்ணம்மா வீட்டிற்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது,
தங்களது பரம்பரை சொத்தை விற்ற பணத்தில், தனக்குச் சேர வேண்டிய 5 லட்சம் ரூபாய் பணத்தில், ஒரு லட்சம் ரூபாய் மட்டுமே தனக்குக் கொடுத்ததாகவும், மீதம் 4 லட்சம் ரூபாய் பணத்தைத் தராததால், ஆத்திரத்தில் செல்வராஜ் - வசந்தா மணியைக் கொன்று, வீட்டின் பின்புறம் புதைக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த போலீசார், உடல்களைத் தோண்டி எடுத்து, பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து தம்பி, தம்பி மனைவியைக் கொலை செய்த அக்கா கண்ணம்மாவையும், கொலைக்கு உடந்தையாக இருந்த கண்ணம்மாவின் மருமகன் நகேந்திரனையும் போலீசார் கைது செய்தனர். மேலும், இந்த கொலையில் வேறு யாரேனும் உடந்தையாக இருந்தார்களா என்ற கோணத்திலும் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.