கர்நாடகாவில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில், தமிழக பக்தர்கள் 10 பேர் உட்பட மொத்தம் 13 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகில் உள்ள பேரிகையைச் சேர்ந்த 14 பேர், கர்நாடக மாநிலம் தர்மசாலா கோயிலுக்கு காரில் சென்றுள்ளனர்.

அவர்கள் அனைவரும் அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு, இன்று அதிகாலை நேரத்தில், காரில் வீடு திரும்பிக்கொண்டு இருந்தனர்.

அப்போது, கார் கர்நாடக மாநிலம் குனிகல் பகுதியில் வந்துகொண்டு இருந்தது. அந்த நேரம் பார்த்து, எதிரே வந்த கார் ஒன்று, திடீரென கட்டுப்பாட்டை இழந்து நடுவிலிருந்த தடுப்புச் சுவரை மோதி, எதிர்புறத்தில் வந்துகொண்டிருந்த கார் மீது, நேருக்கு நேர் மோதி, பயங்கர விபத்துக்குள்ளானது.

இதில், 2 கார்களும் அப்படியே சுக்கு நூறாக நொறுங்கியது. அத்துடன், 2 காரிலும் இருந்த தமிழக பக்தர்கள் 10 பேர் உட்பட மொத்தம் 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும், 4 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்களில் 2 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.