ஆண்களின் திருமண வயதில் அதிரடியாக மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.

இந்தியாவில் குழந்தை திருமணத்தைத் தடுக்கும் வகையில், ஆண்களின் திருமண வயது 21 என்றும், பெண்களின் திருமண வயது 18 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்தியா முழுவதும் வயதுக்கு வந்த பெண்ணை நீண்ட நாட்கள் வீட்டில் வைத்துக்கொள்ளாமல் திருமணம் செய்து வைப்பதும், 18 வயது பூர்த்தியாகாமல் இருக்கும் பெண்களுக்கு, உறவு முறைகளை விட்டுக்கொடுக்காமல் இருப்பதற்காக, சொந்தத்திற்குள்ளேயே திருமணம் செய்து வைக்கும் வழக்கும் இந்தியாவில் பெரும் பகுதியிலிருந்து வருகிறது.

இதனிடையே, இந்தியாவில் தற்போது உள்ள சட்டத்தின்படி, திருமண வயது வருவதற்கு முன்பு திருமணம் செய்துகொண்டால், அவர்கள் திருமண வயது வரும் வரை காத்திருந்து, அதன்பிறகு இருவரும் விருப்பப்பட்டால், அந்த திருமணம் செல்லும் என்ற விதிமுறை நடைமுறையில் உள்ளது. அந்த திருமண வயது வரும் வரை, இருவருமே காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது.

இதனால், கடந்த 2006 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட குழந்தை திருமண தடுப்புச் சட்டத்தில் சில திருத்தங்கள் கொண்டு வர, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அதன்படி ஆண்களுக்கான திருமண வயது 18 ஆக குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. புதிய சட்டம் பிறப்பிக்கப்பட்ட பிறகு, திருமண வயது பூர்த்தியாகாமல் திருமணம் செய்து வைக்கும் பெற்றோர்களுக்கும், அல்லது அவர்களது உறவினர்களுக்கும் கடும் தண்டனை விதிக்கவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

தற்போது குழந்தை திருமணத்தைச் செய்து வைப்பவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராத தொகையும் நடைமுறையில் உள்ளது. ஆனால், புதிய சட்டத்தின் படி, 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், அபராத தொகை 7 லட்சம் ரூபாய் வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.