ஒருதலைக் காதல் மோகத்தால் 22 வயது இளம்பெண் உயிருடன் எரித்துக் கொன்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில், 22 வயதான சந்தியா ராணி என்ற இளம் பெண் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாலையில் பணியை முடித்துவிட்டு, தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.

அப்போது, ஐதராபாத்திற்கு சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்தில் வந்துகொண்டிருக்கும்போது, இருசக்கர வாகனத்தில் அங்கே வந்த கார்த்திக், சந்தியாவிடம் பேசுவதற்காக வண்டியை நிறுத்தியுள்ளார்.

அப்போது, தன்னுடைய காதலை, சந்தியாவிடம் அவர் தெரிவித்துள்ளார். ஆனால், கார்த்திக்கின் காதலைச் சந்தியா ஏற்க மறுத்துள்ளார். இதனால், இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

எவ்வளவோ சொல்லியும், காதலைச் சந்தியா ஏற்காததால் ஆத்திரமடைந்த கார்த்திக், தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து, திடீரென்று சந்தியா மீது ஊற்றி, கண் இமைக்கும் நேரத்தில் தீ வைத்துக் கொளுத்திவிட்டு, அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

இதில், உடலில் தீ பற்றிய நிலையில், அவர் அலறித் துடிக்கவே, அந்த வழியாகச் சென்றவர்கள், தீயை அணைத்து, மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவருக்குத் தீவிரமாகச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும், அவருக்கு 60 சதவீதம் தீ காயங்கள் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அத்துடன், மருத்துவர்கள் அந்த பெண்ணிற்குத் தொடர்ந்த, சிகிச்சை அளித்து வந்த நிலையில், அந்த பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், இருவரும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, ஒரே அலுவலகத்தில் பணியாற்றி வந்ததைக் கண்டுபிடித்தனர். மேலும், தலைமறைவாக உள்ள கார்த்திக்கை, போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இதனிடையே, ஒருதலைக் காதலால் இளம்பெண் ஒருவர் காதலனால் உயிருடன் எரித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.