2 வது காதலனுடன் சேர்ந்து முதல் காதலனை கொலை செய்த பெண்ணை போலீசார் வலை வீசித் தேடி வருகின்றனர்.

“காதலி கிடைக்க வேண்டும் என்றால், கொலையும் செய்யத் துணிந்த காதலன்.. வாழ்ந்த காலம் என்பது கடந்த காலம். ஆனால், இப்போது காலம் மாறி.. பழைய காதலனை கொலை செய்து, புதிய காதலனை அடையத் துடிக்கும் காதலிகள் வாழும் கலியுக காலமாக மாறியிருக்கிறது.. இந்த நிகழ்காலம்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்துள்ள சைதாப்பேட்டையைச் சேர்ந்த கிருஷ்ணவேணி, கடந்த 8 ஆண்டுகளாக முள்ளிப்பட்டு பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரைக் காதலித்து வந்துள்ளார்.

இருவரும் உயிருக்கு உயிராகக் காதலித்து வந்த நிலையில், திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர்.
ஆனால், கடந்த சில வாரங்களாக கிருஷ்ணவேணி, திருமணம் செய்ய மறுப்புத் தெரிவித்து, சுரேஷை தவிர்த்து வந்துள்ளார்.

இதனிடையே, கிருஷ்ணவேணிக்கு அதே பகுதியைச் சேர்ந்த அஜித்குமாருடன் அறிமுகமாகி, இருவரும் நெருங்கிப் பழகத் தொடங்கினர். நாளடைவில், இவர்கள் இருவரும் காதலிக்கத் தொடங்கிய நிலையில், இருவரும் தனிமையில் அடிக்கடி சந்தித்துப் பேசி வந்தனர்.

இந்த தகவல் சுரேஷ்க்கு தெரிய வந்ததால், அவர் கடும் அதிர்ச்சியடைந்தார். அத்துடன் கிருஷ்ணவேணி - அஜித்குமார் காதலுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தார்.

இதனால், கிருஷ்ணவேணி - அஜித்குமார் இருவரும் சேர்ந்து, பேச வேண்டும் என்று கூறி, சுரேஷ்சை தனிமையில் வரவழைத்துள்ளனர்.

பின்னர், இருவரும் சேர்ந்து சுரேஷ்சை கொலை செய்துவிட்டு, தப்பி ஓடியுள்ளனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், கிருஷ்ணவேணி - அஜித்குமார் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து தேடிவந்தனர்.

இந்நிலையில், அஜித்குமாரை கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, வேலூர் சிறையில் அடைத்தனர். அத்துடன், தலைமறைவாக உள்ள கிருஷ்ணவேணியை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.