பெட்ரோல் பங்கில் டீசல் நிரப்பிக் கொண்டிருந்த ஓட்டுநர் மீது தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 33 வயதான ராஜேஷ்குமார் சிங், ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று சென்னை பூந்தமல்லி அடுத்துள்ள செம்பரம்பாக்கத்தில் உள்ள பெட்ரோல் பங்கில், தன்னுடைய கன்டெய்னர் லாரிக்கு அவர் டீசல் நிரப்பிக்கொண்டிருந்தார்.

பெட்ரோல் பங்கில் வேலை பார்க்கும் சுரேஷ், கன்டெய்னர் லாரியில் டீசலை நிரப்புவதற்காக பைப்பை போட்டுவிட்டு, அதைக் கையில் பிடித்திருக்கும்படி, ஓட்டுநரிடம் கூறிவிட்டு, பில் போட சற்று தொலைவில் சென்றுவிட்டார்.

அப்போது, எதிர்பாராத விதமாக திடீரென டீசல் டேங்கிலிருந்து தீ பற்றி எரிந்தது. இதைப் பார்த்த சுரேஷ், அங்கிருந்து ஓடினார். ஆனால், ஓட்டுநர் ராஜேஷ்குமார் மீது தீ பற்றி எரிந்தது. இதனால், பயந்துபோன அவர், அங்கிருந்து அலறி அடித்துக்கொண்டு ஓடினார்.

இதனையடுத்து, அங்கு நின்றுகொண்டிருந்தவர்கள் தீயை அணைத்து, அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால், அவருக்கு 30 சதவீதம் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

இதனிடையே, ஓட்டுநர் மீது தீ பற்றி எரிந்த காட்சிகள், அங்குள்ள சிசிடிவியில் பதிவாகியது. இந்நிலையில், அந்த தீ விபத்து காட்சிகள், தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.