போதையில் தந்தையைக் கொலை செய்த மகன், வீட்டிலேயே புகைக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாவட்டம் சின்னக்கள்ளிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 60 வயது முதியவரான மாகாளி தான், மகனால் அடித்து கொலை செய்யப்பட்டவர்.

மாகாளியின் மனைவி, கடந்த 2 வருடங்களுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், திருமணமான தனது மகன் சிவராஜ் உடன், கருத்து வேறுபாடு ஏற்பட்டு, மாகாளி தனியாக வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று இரவு சிவராஜ் குடித்துவிட்டு, மாகாளி வீட்டிற்கு வந்து, அவருடன் தகராறு செய்துள்ளார். அப்போது, குடிபோதையிலிருந்த சிவராஜ், தந்தை என்று கூட பார்க்காமல் அவரை கடுமையாகத் தாக்கி உள்ளார். இதில், மயங்கி விழுந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து, வீட்டிலேயே அவரை புதைக்க முற்பட்டு, வீட்டின் உள்ளே பள்ளம் தோண்டி உள்ளார். அப்போது, அதிகமான சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வீட்டிற்குள் வந்து பார்த்துள்ளனர். இதனால், பயந்துபோன சிவராஜ், அங்கிருந்து தப்பித்து ஓடியுள்ளார். பின்னர், கிராம மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, விரைந்து வந்த போலீசார், வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.

இதனிடையே, குடும்ப பிரச்சனை காரணமாக, குடிபோதையில் தந்தையை மகனே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.