கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்தியாவில் 9 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 415 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 69 வயதுடைய முதியவர் நேற்றைய தினம் உயிரிழந்தார். இதனால், இந்தியாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், கொரோனா தாக்குதலுக்கு இந்தியாவில் நேற்று காலை வரை 391 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இந்தியாவில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 415 ஆக உயர்ந்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் மேலும் 10 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மகாராஷ்டிராவில் கொரோனா தாக்குதலுக்கு பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 74 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், புதுச்சேரியில் நாளை முதல் வரும் 31 ஆம் தேதி வரை தமிழகம் உள்ளிட்ட வெளிமாநில வாகனங்கள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மாநிலங்களுக்கு இடையிலான பேருந்து போக்குவரத்து வரும் 31 ஆம் தேதி வரை ரத்து செய்ய, மத்திய அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே, டெல்லியில் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு சம்பளத்துடன் மார்ச் 31 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்க டெல்லி அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.