தமிழகத்தில் போலீஸ் மற்றும் தீயணைப்புத் துறையைச் சார்ந்த 225 பேருக்கு கொரோனா பரவி உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அர்ப்பணிப்போடு பணியாற்றும் தமிழகக் காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் மீது கொரோனா மிகவும் கொடூரமாகத் தாக்குதல் நடத்தியுள்ளது. உயர் போலீஸ் அதிகாரிகள் முதல், காவலர்கள் வரை கொரோனாவின் தாக்குதலில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்கள்.

தமிழகத்தில் கொரோனா தாக்கம் தீவிரமாகப் பரவி வரும் நிலையில், போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் பாதுகாப்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையில் இதுவரை 225 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக, தமிழக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மட்டும் 3 உயர் போலீஸ் அதிகாரிகள், கொரோனா தாக்கத்தில் சிக்கி உள்ளனர். அத்துடன், மாவட்ட அளவில் 15 போலீஸ் இன்ஸ்பெக்டர்களும் கொரோனா தாக்குதலில் சிக்கி உள்ளனர்.

சென்னை காவல்துறையில் நேற்று 8 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 2 சப் இன்ஸ்பெக்டர்கள் உள்பட 4 பேர் மத்திய குற்றப்பிரிவைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது. அதேபோல், ஆளுநர் உட்பட முக்கிய விஐபியின் பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த 2 போலீசாருக்கும் கொரோனா வைரஸ் பரவி உள்ளது.

இவர்களில், சென்னையில் மட்டும் 150 போலீசார் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இவர்களில் 21 பேர் தீயணைப்புத் துறையினர். டி.ஜி.பி. அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்களும் இதில் உள்ளனர். அதேபோல், தமிழகத்தின் பிற பகுதிகளில் தீயணைப்புத் துறையைச் சேர்ந்தவர்கள் 27 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட போலீஸ் மற்றும் தீயணைப்புத் துறையினரின் குடும்பத்தினரும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதனிடையே, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 4 வட்டாட்சியர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.