சென்னையில் ஒன்றரை வயதுக் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த 19 வயதான ரமேஷ், படிப்பைப் பாதியிலேயே விட்டுவிட்டு, மதுபோதைக்கும், கஞ்சா பழக்கத்திற்கு அடிமையானதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், ரமேஷின் வீட்டின் அருகே தினமும் கூலி வேலைக்குச் செல்லும் தம்பதியினர் குடியிருந்துள்ளனர். அவர்களுக்கு ஒன்றரை வயது பெண் குழந்தை இருந்துள்ளது. இதனிடையே, அந்த ஒன்றரை வயது பெண் குழந்தையைத் தினமும் கொஞ்சவும், தூக்கி விளையாடுவதுமாக இருந்துள்ளார்.

இதேபோல், கடந்த 2 நாட்களுக்கு முன்பு குழந்தையைத் தூக்கி விளையாடி உள்ளான். அப்போது, குழந்தை கதறிக் கதறி அழுதுள்ளது. இதனால், பயந்துபோன ரமேஷ், குழந்தையை வீட்டில் விட்டு விட்டு, தப்பிச் சென்றுள்ளார்.

குழந்தை அழுவதைப் பார்த்த குழந்தையின் தாய், குழந்தை தூக்கிக் கொஞ்சி உள்ளார். அப்போதும் அழுகை நிற்கவில்லை. இதனால், பயந்துபோன அவர்கள், குழந்தையை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளனர்.

அங்கு, குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தையின் பிறப்பு உறுப்பில் காயம் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து, குழந்தை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டிருப்பதாக, பெற்றோர்களிடம் தெரிவித்தனர். இதனால், திகைத்து நின்ற குழந்தையின் பெற்றோர்கள், தாம்பரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இது குறித்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த ரமேஷை கைது செய்து, சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.