நடிகர் சிம்பு சபரிமலை ஐயப்பன் கோயிலில் தரிசனம் செய்த புகைப்படம் தற்போது வெளியாகி உள்ளது.

நடிகர் சிம்பு மைக்கை பிடித்தாலே சர்ச்சை தான். ஆனால், அதையும் தாண்டி அவர் சமீபத்தில் எந்த படத்தில் நடித்தாலும், அதுவும் ஏதோ ஒரு விதத்தில் சர்ச்சையாகி விடுகிறது.

அதன்படி, சிம்பு கடைசியாக நடித்த படம் “ வந்தா ராஜாவா தான் வருவேன்” படத்திற்குப் பிறகு, அவர் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் “மாநாடு” படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால், சிம்பு கால்ஷிட் பிரச்சனை காரணமாக, அந்த படம் கைவிடப்படுவதாகப் படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கூறினார்.

இதனையடுத்து, சமரசப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட பிறகு, மீண்டும் நடிகர் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக மன இறுக்கத்திலிருந்த நடிகர் சிம்பு, திடீரென்று சபரிமலை ஐயப்பனுக்கு மாலை போட்டார். இதனால், “மாநாடு” படத்தின் இயக்குநரும், தயாரிப்பாளரும் மீண்டும் அதிர்ச்சியடைந்தனர்.

இதனிடையே, கடந்த சில வாரங்களா ஐயப்பனுக்கு விரதம் இருந்து பக்தியோடு இருந்த சிம்பு, கடந்த சில நாட்களுக்கு முன்பு, சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு புறப்பட்டுச் சென்றார். அவரை, அவரது தந்தை டி.ராஜேந்தர் வழி அனுப்பி வைத்தார்.

இந்நிலையில், சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் சென்ற நடிகர் சிம்பு, மிகுந்த பக்தியுடன் ஐயப்பனைத் தரிசனம் செய்தார். கோயிலைச் சுற்றியும் அவர் வலம் வந்தார்.

சுவாமி ஐயப்பனை நடிகர் சிம்பு தரிசனம் செய்யும் புகைப்படங்கள், தற்போது வெளியாகி உள்ளன. அந்த புகைப்படங்கள் எல்லாம், சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதற்கு சிம்புவின் ரசிகர்கள் “சாமியே.. சரணம் ஐயப்பா” என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

இதனிடையே, நடிகர் சிம்பு கடைசியாகக் கடந்த 1992 ஆம் ஆண்டு, சபரிமலைக்கு மாலை போட்டுச் சென்றார். இதனையடுத்து, சுமார் 27 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் சிம்பு, தற்போது மீண்டும் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மாலை போட்டுச் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.