11 ஆம் வகுப்பு மாணவி 6 மாத கர்ப்பமான நிலையில், தற்கொலைக்கு முயன்றவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்த சிறுமி, அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வந்தார். எப்போதும் துருதுருவென இருக்கும் மாணவி, கடந்த சில மாதங்களாக யாரிடமும் பேசாமல் சோகமாகக் காணப்பட்டுள்ளார்.

இந்நிலையில், கடந்த 23 ஆம் தேதி, சிறுமியின் வீட்டில் அனைவரும் வெளியே சென்றுள்ளனர். அப்போது, வீட்டில் தனியாக இருந்த சிறுமி, விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதனையடுத்து, பெற்றோர் வீடு திரும்பிய நிலையில், சிறுமி வாயில் நுரை தள்ளிய நிலையில் கிடந்துள்ளதைக் கண்டு, பதறிப்போன அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமி 6 மாதம் கர்ப்பம் தரித்திருப்பதாகவும், கருவைக் கலைத்தால் மட்டுமே சிறுமியைக் காப்பாற்ற முடியும் என்றும் கூறியுள்ளனர். அதனால், மேலும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், கருவைக் கலைத்து மகளின் உயிரைக் காப்பாற்றும்படி கெஞ்சி உள்ளனர்.

அதன்படி, சிறுமியின் வயிற்றில் உள்ள 6 மாத கருவை அகற்றிய நிலையில், சிறுமி சிகிச்சைப் பலனின்றி தற்போது உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பாக விரைந்து வந்த போலீசார், வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சிறுமியை ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றியது யார் என்றும் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், அப்பகுதி மக்கள் அதிர்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்ந்துள்ளனர்.