10 ஆம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய ஆட்டோ ஓட்டுநர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் கூட்டேரிப்பட்டு பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவர், அந்த பகுதியில் ஆட்டோ ஓட்டுநராக இருந்து வருகிறார்.

இதனிடையே, அதேப் பகுதியைச் சேர்ந்த 10 ஆம் வகுப்பு மாணவி தினமும் பள்ளிக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பும்போது, வெங்கடேஷ் அந்த சிறுமியை பின்தொடர்ந்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.

மேலும், அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பிறகு, அந்த பகுதியில் உள்ள ஒரு சிறு கோயிலில் வைத்து அந்த சிறுமிக்குத் தாலி கட்டி உள்ளார்.

இதனையடுத்து வீடு திரும்பிய சிறுமி, தனக்குத் திருமணம் நடந்தது குறித்து வீட்டில் எதுவும் சொல்லாமல் இருந்துள்ளார்.

சில நாட்கள் இப்படியே சென்ற நிலையில், தற்போது மாணவிக்கு திடீரென்று வயிற்று வலி ஏற்பட்டுத் துடித்துள்ளார். இதனால், பதறிப்போன சிறுமியின் பெற்றோர், உடனடியாக அருகில் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமி கர்ப்பமாக இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து, சிறுமியின் பெற்றோரிடம் கூறிய நிலையில், அதிர்ச்சியடைந்த அவர்கள், கர்ப்பத்திற்குக் காரணமானவர் குறித்து விசாரித்துள்ளனர்.

சிறுமியும் தனக்கு நேர்ந்த அவலங்கள் பற்றியும், வெங்கடேஷ் பற்றி கூறியுள்ளார். இதனால், இன்னும் அதிர்ச்சியடைந்த பெற்றோர், திண்டிவனம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், ஆட்டோ ஓட்டுநர் வெங்கடேஷை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் 10 ஆம் வகுப்பு மாணவியைப் பின்தொடர்ந்து சென்று பாலியல் பலாத்காரம் செய்து, அதன் பிறகு தாலிகட்டிய சம்பவம், அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.