டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகுவதாக அறிவித்து உள்ள நிலையில், தோனி, ரவி சாஸ்திரிக்கு நன்றி தெரிவித்து உருக்கமாக பேசி உள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி, 1-2 என்று தோல்வி அடைந்தது.

இதனையடுத்து தான், இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி விலகுவதாக முன்னதாக திடீரென்று அறிவித்தார்.

விராட் கோலியின் இந்த முடிவால், இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

இந்திய அணியில் டி20 மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளின் கேப்டன் பதவியில் இருந்து ஏற்கனவே விராட் கோலி விலகியது, ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்த நிலையில், தற்போது அவர் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

அதாவது, தலைநகர் டெல்லியைச் சேர்ந்த 33 வயதாகும் விராட் கோலி, இந்திய கிரிக்கெட் அணியின் மிகச் சிறந்த வீரர்களுள் ஒருவராக வலம் வருகிறார்.

33 வயதாகும் விராட் கோலி, கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியது குறித்து தனது டிவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் விராட் கோலி மிகவும் உருக்கமாக பதிவிட்டு உள்ளார்.

“7 ஆண்டுகள் கடின உழைப்பு, முயற்சியின் மூலம் இந்திய அணியை சரியான பாதையில் கொண்டு செல்லப்பட்டது என்றும், என்னுடைய பணியை நேர்மையாக செய்திருக்கிறேன்” என்றும்,விராட் கோலி பதிவிட்டு உள்ளார்.

“எல்லாமும் ஒரு நாள் முடிவுக்கு வரும் என்பதை போலவே, அணித் தலைவர் பதவியும் தற்போது முடிவுக்கு வந்து உள்ளது” என்றும், தெரிவித்துள்ளார்.

அத்துடன், “எனது கேரியரில் நான் பல ஏற்ற, இறக்கங்களை சந்தித்திருக்கிறேன் என்றும், ஆனால் என்றுமே அவநம்பிக்கையை நான் கொண்டிருக்கவில்லை” என்றும், அவர் கூறியுள்ளர்.

மேலும், “என்னால் எப்போதும் 120 சதவிகித உழைப்பைக் கொடுக்க முடியும் என்று நம்பியிருக்கிறேன் என்றும், அதைக் கொடுக்க முடியாத போது மேற்கொண்டு தொடர்வது அவ்வளவு சரியாக இருக்காது என்றும், ஆனாலும் என்னால் என்னை ஏமாற்றி கொண்டு செயல்பட முடியாது” என்றும், விராட் கோலி சுட்டிக்கட்டி உள்ளார்.

குறிப்பாக, “நாட்டுக்காக வழி நடத்தும் பதவியை அளித்ததற்காகவும், நீண்ட காலம் அந்த பணியில் இருக்க எனக்கு வாய்ப்பு அளித்ததற்காகவும் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றும், அவர் கூறியுள்ளார்.

“எனது அணி வீரர்களுக்கு பெரிய நன்றி என்றும், உங்களால் இந்த பயணம் மிகவும் அழகானதாகவும், நினைவுகளோடும் கடந்தது” என்றும், விராட் கோலி குறிப்பிட்டு உள்ளார்.

முக்கியமாக, “எனக்கு உறுதுணையாக இருந்த ரவி சாஸ்திரி பெரிய நன்றி என்றும், இறுதியாக எம்.எஸ்.தோனி அவர்களுக்கும் ஒரு பெரிய நன்றியை இப்போது தெரிவிக்கிறேன்” என்றும், மிகவும் உருக்கமாக விராட் கோலி பதிவு செய்து உள்ளார்.

“எனக்குள் இருக்கும் கேப்டனுக்கான தகுதியை கண்டறிந்து, நம்பி எனக்கு உறுதுணையாக இருந்து முன்னேற்றியவர்கள் இவர்களே” என்றும், விராட் கோலி, நெக்குறுகி தனது டிவிட்டர் பதிவில் நினைவு கூர்ந்து உள்ளார்.