நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையில் செயல்படும் இணையதளங்கள், யூ-டியூப் சேனல்களை முடக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.

டெல்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்திற்குப் பிறகு, தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், பாகிஸ்தானில் இருந்து இயக்கப்படும் 20 இணையதள கணக்குகள் அடையாளம் காணப்பட்டு அவற்றை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

இந்நிலையில் இந்தியாவிற்கு எதிரான கருத்துகள், பொய்யான தகவல்களை பரப்பும், நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையில் செயல்படும் இணையதளங்கள், யூ-டியூப் சேனல்கள் உள்ளிட்டவை கண்காணிக்கப்பட்டு அவற்றை முடக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். மேலும் இதனிடையே இந்திய இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு எதிராக செயல்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில், 19 யூ-டியூப் சேனல்கள் மற்றும் 2 இணையதளங்கள் ஏற்கனவே முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.