காதலைக் கெடுத்த அக்காவை, சொந்த தங்கையே எரித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் எர்ணாகுளம் அடுத்துள்ள பரவூர் பகுதியை சேர்ந்தவர் சிவானந்தன், இவர் மனைவி ஜிஜி. இந்த தம்பதிகளுக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் விஸ்மயா (25), இளைய மகள் ஜித்து (22).

கடந்த 21 ஆம் தேதி சிவானந்தன், அவர் மனைவி இருவரும் நகரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மதியம் சென்று இருந்தனர். இளைய மகள் ஜித்துவிற்கு உடல்நிலை பாதிப்பு உள்ளதால் வீட்டில் உள்ள அறையில் அவர் கைகள் இரண்டையும் கட்டி படுக்கையில் போட்டு விட்டு தாய் தந்தையர் இருவரும் வெளியில் சென்றிருந்தனர்.

மூத்த மகள் விஸ்மயா, தங்கையை பார்த்துக் கொண்டு வீட்டில் இருந்துள்ளார். அப்போது வீட்டில் இருந்து அலறல் சத்தம் கேட்டுள்ளது. மேலும் வீட்டுக்குள் இருந்து புகை வருவதை கண்ட அக்கம் பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தனர். வீட்டுக்குள் பெண் ஒருவர் கருகிய நிலையில் இறந்து கிடந்தார்.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இந்நிலையில் வெளியே சென்றிருந்த கணவன் மனைவி இருவரும் வீட்டுக்கு வந்தனர். அப்போது வீட்டுக்குள் மகள்களில் ஒருவர் உடல் கருகி இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து கதறித் துடித்தனர்.

மற்றொரு மகள் வீட்டுக்குள் இல்லாததை கண்டு பெற்றோர் கலக்கமுற்றனர். இதற்கிடையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விரைந்து வந்து இளம்பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

உடல் மிகவும் கருகிய நிலையில் இருந்ததால் உயிரிழந்தது விஸ்மயா என்பது டி.என்.ஏ. பரிசோதனை மூலமே உறுதி செய்யப்பட்டது. அதேவேளை அந்தப் பகுதியில் இருந்த சி.சி.டி.வி. காட்சிகளை வைத்து ஆராய்ந்ததில் விஸ்மயாவின் இளையசகோதரியான ஜித்து தீ விபத்து ஏற்பட்ட சில நிமிடங்களில் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளது தெரியவந்தது.

இதையடுத்து பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் பரவூர் போலீஸ் இதுகுறித்து வழக்குப் பதிவுசெய்து தலைமறைவாக இருந்த ஜித்துவை தேடி வந்தனர். போலீஸ் தேடுதலின் போது பரவூர் அடுத்துள்ள காக்கநாடு நகர் பகுதியில் சுற்றித்திரிந்த ஜித்துவை செல்ஃபோன் சிக்னல் உதவியுடன் போலீசார் நேற்று கண்டுபிடித்தனர்.

போலீசிடம் பிடிபட்ட ஜித்துவிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது. அதில் தங்கை ஜித்து ஒருவரை காதலித்து வந்துள்ளார். இதை அறிந்த விஸ்மயா பெற்றோரிடம் தங்கையின் காதல் குறித்து தெரிவித்துள்ளார்.

இதனால் அக்கா மீது ஜித்து கோவத்திலிருந்து வந்துள்ளார். இந்நிலையில் அக்கா, தங்கை வீட்டில் தனியாக இருந்தபோது அக்கா விஸ்மயாவை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.
இதுகுறித்து ஜித்து கூறுகையில், “வீட்டில் கைகள் கட்டப்பட்ட நிலையில் இருந்தேன். அப்போது எனது கைகள் கட்டுகளை அவிழ்த்து விடுமாறு அக்காவிடம் கூறினேன். அக்கா விஸ்மயா கை கட்டுகளை அவிழ்த்து விட்டார்.

அப்போது எனது காதலை அக்கா கெடுத்து விட்டதாக கூறி அக்காவிடம் சண்டை போட்டேன். அவளும் என்னிடம் சண்டை போட்டார். ஒரு கட்டத்தில் கோபம் கொண்டு வீட்டில் இருந்த கத்தியை எடுத்து அக்கா உடலில் சரமாரியாக குத்தினேன். இதில் சம்பவ இடத்தில் அக்கா இறந்து விட்டார்.

அக்கா இறந்தது தெரிந்தவுடன் அவர் உடலில் வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை எடுத்து ஊற்றி தீ வைத்து எரித்தேன். உடல் முற்றிலும் தீயில் கருகிய பின்பு வீட்டை விட்டு வெளியேறினேன்” இவ்வாறு அவர் கூறியுள்ளார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.