ஹிந்தி சினிமாவில் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு மேல் மிக முக்கிய நடிகராக நட்சத்திர ஹீரோவாக ஜொலித்து வருபவர் நடிகர் சஞ்சய் தத். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ராக்கி திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக களமிறங்கிய நடிகர் சஞ்சய் தத் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். அந்த வகையில் கடைசியாக கடந்த 2022 ஆம் ஆண்டில் இந்தியாவிலேயே மிகப்பெரிய வசூல் செய்த பிளாக்பஸ்டர் திரைப்படமாக வசூல் சாதனை படைத்த கே ஜி எஃப் சாப்டர் 2 திரைப்படத்தில் அதீரா எனும் கதாபாத்திரத்தில் வில்லனாக மிரட்டிய நடிகர் சஞ்சய் தத் தொடர்ந்து பாலிவுட்டில் அக்ஷய் குமாரின் சாம்ராட் பிரித்விராஜ் மற்றும் ரன்பிர் கபூரின் ஷாம்ஷீரா உள்ள திரைப்படங்களில் மிக முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்.
இதனை அடுத்து இந்த 2023 ஆம் ஆண்டிலும் அடுத்தடுத்து அதிரடியான திரைப்படங்களில் சஞ்சய் தத் நடித்து வருகிறார். முதலாவதாக இயக்குனர் அட்லி முதல் முறை பாலிவுட்டில் இயக்குனராக களமிறங்கும் ஜவான் திரைப்படத்தில் ஷாருக் கான் உடன் இணைந்து முக்கிய கவுரவ வேடத்தில் நடிக்கும் நடிகர் சஞ்சய் தத் தி குட் மகாராஜா எனும் ஹிந்தி படத்திலும் பாப் ஹிந்தி எனும் படத்திலும் நடித்து வருகிறார். மேலும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தயாராகி வரும் லியோ திரைப்படத்திலும் சஞ்சய் தத் வில்லனாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக காஷ்மீரில் தன் பகுதி படப்பிடிப்பை நிறைவு செய்த சஞ்சய் தத் விரைவில் சென்னையில் நடைபெறும் லியோ திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறார்.
இதனிடையே தற்போது படப்பிடிப்பில் நடந்த விபத்து ஒன்றில் நடிகர் சஞ்சய் தத் பலத்த காயமடைந்துள்ளார். கன்னடத்தில் நடிகர் துருவா சர்ஜா கதாநாயகனாக நடிக்கும் கேடி திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் சஞ்சய் தத் நடித்து வருகிறார். கேஜிஎப் திரைப்படத்தை தொடர்ந்து கன்னட சினிமாவின் அடுத்த பேன் இந்தியா திரைப்படமாக பிரம்மாண்ட படைப்பாக தயாராகி வரும் இத்திரைப்படத்தில் ஷில்பா ஷெட்டி மிக முக்கிய வேடத்தில் நடிக்கிறார். கேடி திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது பெங்களூருவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மகடி ரோடு பகுதியில் நடைபெற்று வந்த கேடி திரைப்படத்தின் படப்பிடிப்பில் குண்டு வெடிப்பு காட்சிகள் படமாக்கப்பட்டன. அப்படி குண்டுவெடிப்பு காட்சி படமாக்கப்படும்போது நடிகர் சஞ்சய் தத்தின் மிக அருகாமையில் ஒரு குண்டு வெடித்ததால் அவர் மிகுந்த காயம் அடைந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது தலை, முகம் மற்றும் மூட்டு பகுதிகளில் பலத்த காயம் அடைந்து இருப்பதாகவும் இந்த விபத்தின் காரணமாக படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பெங்களூரில் தனது காயங்களுக்கான முதலுதவியை எடுத்துக் கொண்ட நடிகர் சஞ்சய் தத் உடனடியாக மும்பை புறப்பட்டு சென்றுள்ளதாகவும் அங்கே அடுத்த கட்ட சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. தற்போது படப்பிடிப்பில் மிகுந்த காயம் அடைந்திருக்கும் நடிகர் சஞ்சய் தத் விரைவில் பூரண குணமடைந்து மீண்டு வர வேண்டும் என கலாட்டா குழுமம் வேண்டிக் கொள்கிறது.