கள்ளக்காதல் விவகாரத்தில் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில், இருவருக்கு கத்தி குத்து நடந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே வள்ளூர் பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய ராஜா, எலக்ட்ரானிக்ஸ் கடை நடத்தி வந்தார். சம்பவத்தன்று நேற்று இரவு அவர், கடையை மூடிவிட்டு, வீட்டிற்கு சைக்கிளில் சென்றுகொண்டு இருந்தார்.

அப்போது, வெளிச்சம் இல்லாத இருட்டு பகுதியில் அவர் சென்றுகொண்டிருக்கும்போது, திடீரென்று அவரை வழிமறித்த மர்ம நபர்கள் சிலர், அவரை கத்தியால் சரமாரியாகத் தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். இதில், ரத்த வெள்ளத்தில் மிதந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும், கொலை செய்யப்பட்ட ராஜாவின் உறவுக்கார பெண்ணான 40 வயதுடைய திலகவதியையும், அவரது மகன் கவுதமையும், அடையாளம் தெரியாத சிலர் வீடு புகுந்து கத்தியால் குத்தியுள்ளனர். இதில், அவர்கள் கூச்சலிடவே, கொலையாளிகள் தப்பி ஓடியுள்ளனர். இதனையடுத்து, ரத்த வெள்ளத்தில் கிடந்த திலகவதியையும், அவரது மகனையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு இருவருக்கும் தீவிரமாகச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த இரு சம்பவங்கள் குறித்தும் வழக்குப் பதிவு செய்த பாப்பாரப்பட்டி போலீசார், விசாரணை மேற்கொண்டனர். அப்போது, மனைவியைப் பிரிந்து வாழ்ந்த ராஜாவுக்கும், கணவரை இழந்து வாழும் திலகவதிக்கும் கள்ளக் காதல் இருந்து வந்ததாக போலீசார் முதற்கட்ட விசாரணையில் கண்டுபிடித்தனர். மேலும், ராஜா அல்லது திலகவதி சம்மந்தப்பட்ட ரத்த சம்மந்த உறவினர்களே இந்த கொலையைச் செய்து, மேலும் ஒரு கொலை முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம் என்று கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.