திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்டு உள்ள ஒட்டப்பட்டி பகுதியில் இரு சக்கர வாகனத்தில் பயணித்த ஒருவர் விபத்துக்குள்ளாகி கீழே விழுந்து கிடப்பதாக அங்குள்ள ஜோலார்பேட்டை காவல் நிலையத்திற்குத் தகவல் கிடைத்து உள்ளது. இது குறித்து, சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த காவல் துறையினர், விபத்துக்குள்ளான நபரை உடனடியாக மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அவருக்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவர் தற்போது சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டனர். அப்போது, விபத்தில் உயிரிழந்த அந்த நபர், திருப்பத்தூர் மாவட்டம், சோலையார்பேட்டை ஒன்றியத்துக்குட்பட்ட தாமலேரி முத்தூர் பகுதியைச் சேர்ந்த 30 வயதான சிவன் என்பது தெரிய வந்தது.

மேலும், அவர் திருப்பத்தூர் நீதிமன்றத்தில் குமாஸ்தாவாக வேலை பார்த்து வந்ததும், போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. 

இது தொடர்பாக தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

அதாவது, “திருப்பத்தூர் நீதிமன்றத்தில் குமாஸ்தாவாக வேலை பார்த்து வந்த சிவனும், ஜோலார்பேட்டை ஒன்றியம் திரியாலம் பகுதியைச் சேர்ந்த கோழிக்கடையும், பைனான்ஸ் தொழிலும் செய்து வரும் அவரது நண்பர் 29 வயதான ஆனந்த் பாபுவும், அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றி வரும் இளம் பெண் ஒருவரைக் காதலித்து வந்து உள்ளனர்.

ஆனால், அந்த இளம் பெண் குமாஸ்தாவாக வேலை பார்த்து வந்த சிவன் மேல் காதல் வயப்பட்டு, தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. 

இந்த தகவல் எப்படியோ, ஆனந்த் பாபுக்கு தெரிய வந்தது. இதனால் கடும் அதிர்ச்சியடைந்த ஆனந்த் பாபு, “நீ அந்த பெண்ணைத் திருமணம் செய்தால், நான் உன்னை கொலை செய்து விடுவேன்” என சிவனை, ஆனந்த் பாபு மிரட்டியதாகத் தெரிகிறது. இதனால், அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு, இது தொடர்பாகப் பிரச்சனையும் இருந்து வந்துள்ளது.

மேலும், ஆனந்த் பாபு மீதான பயத்தில், சிவன் தன் காதலியைத் திருமணம் செய்ய முன் வராமல் இருந்து உள்ளார். ஆனால், அந்த பெண் தொடர்ந்து சிவனை திருமணம் செய்ய வற்புறுத்தி வந்துள்ளார். இதனால், வேறு வழியில்லாமல் சிவன், திருமணத்திற்கு சம்மதித்து உள்ளார்.

இதனால், இன்னும் ஆத்திரமடைந்த ஆனந்த் பாபு, தன் நண்பன் சிவனை தொலைபேசி மூலம் நேற்றிரவு தொடர்பு கொண்டு தனியாக வருமாறு அழைத்து உள்ளார். அதன் படி, ஒட்டப்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் தனியாக சென்ற சிவனை, ஆனந்த பாபு வழி மறித்து இரும்புக் கம்பியால் தாக்கி, கொடூரமாக கொலை செய்துள்ளார். இதில், ரத்த வெள்ளத்தில் அவர் சரிந்து விழவும், ஆனந்த பாபு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

அதன் பிறகு, அந்த வழியாக சென்றவர்கள், சிவன் விபத்தில் சிக்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளதும், விசாரணையில் தெரிய வந்தது.

இதனையடுத்து, வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், தலைமறைவான ஆனந்த் பாபுவை வலைவீசித் தேடி வருகின்றனர். 

இதனிடையே, ஒரே பெண்ணை இருவர் காதலித்ததால், நீதிமன்ற குமாஸ்தா அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.