திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பொதுக்குழு கூட்டம் கடந்த வாரம் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் இருந்து காணொலி வாயிலாக பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இதில், திமுக பொதுச்செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர்.பாலுவும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதேபோல்,  திமுக துணை பொதுச்செயலாளராக பொன்முடியும், ஆ. ராசாவும் தேர்வாகினர். இதை கட்சியின் தலைவர் முக ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். 

கானொளி வாயிலாக கட்சி உறுப்பினர்களை சந்தித்து, வெற்றிகரமாக பொதுக்குழு நடத்திய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதன் ஒருபகுதியாக பேசியிருந்தார். தனது உரையில்,

``துரைமுருகனும், டி.ஆர்.பாலுவும் கட்சியில் படிப்படியாக உயர்ந்து தற்போதைய நிலையை எட்டியுள்ளனர். 9 முறை சட்டமன்றத்துக்கு சென்றுள்ள துரைமுருகன் ஒரு சூப்பர் ஸ்டார். சட்டமன்றத்தில் ஸ்டாராக மட்டுமல்லாமல் சூப்பர் ஸ்டாராகவும் வலம் வருகிறார். துரைமுருகனின் கனிவும், டி.ஆர்.பாலுவின் கண்டிப்பும் திமுகவின் வளர்ச்சிக்கு பயன்பட வேண்டும்.
 
அண்ணா, நெடுஞ்செழியன், அன்பழகன் ஆகியோரது பொறுப்பு துரைமுருகன் தோளில் சுமத்தப்பட்டுள்ளது. பல்வேறு பதவிகளை வகித்த துரைமுருகன் இருக்கும் இடம் கலகலப்பாக இருக்கும். திமுகவின் போர்வாளாக திகழ்கிறார் டி.ஆர்.பாலு. கருணாநிதிக்காக் உயிரையும் கொடுக்கக்கூடிய திமுகவின் போர்வாள் டி.ஆர்.பாலு.

மிசா காலத்தின் போது கைதாகி எங்களுடன் சிறையில் இருந்தவர் டி.ஆர்.பாலு, டி.ஆர்.பாலு 6 முறை மக்களவை எம்.பி,. 3 முறை மத்திய மந்திரியாக இருந்தவர். வெட்டி வா என்றால் கட்டி வரக்கூடியவர் டி.ஆர்.பாலு என கருணாநிதி குறிப்பிடுவார். துரைமுருகனும், டி.ஆர்.பாலுவும் திடீரென உயரத்தை எட்டவில்லை.

ஆ.ராசா 5 முறை எம்.பி. பொன்முடி 5 முறை எம்.எல்.ஏ என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ஆ.ராசாவும், பொன்முடியும் திமுகவின் அடிப்படை கொள்கைகளில் உறுதியாக இருக்க கூடியவர்கள். கட்சியின் வளர்ச்சிக்கு தங்களது மொத்த திறமையும் பயன்படுத்துங்கள்.

இன்னும் 8 மாதங்களில் ஆளுங்கட்சியாக திமுக மாறும். ஆளுங்கட்சியினர் மீது உள்ள குறைபாடுகளை எழுதுபவர்களே ஊடகங்கள், ஆனால் தமிழகத்தில் எதிர்க்கட்சிகளை பற்றியே அதிகம் ஊடகங்கள் எழுதுகின்றன. தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கிவிட்டது. 5 மாதங்கள் கொரோனாவால் கழிந்து விட்டது . இனி கட்சியினர் விரைந்து செயல்பட வேண்டும். நாம் தான் ஆட்சிக்கு வர போகிறோம்"

என்றார் அவர்.

இந்நிலையில், விழுப்புரம் திமுக மத்திய மாவட்ட செயலாளராக நா.புகழேந்தி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- திமுகவின் விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளராக நா.புகழேந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார். திமுக துணைப் பொதுச்செயலாளரான க.பொன்முடி மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து விலகியதால் நா.புகழேந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார். திமுக சட்டவிதிகளின் படி ஒருவருக்கு ஒரு பொறுப்பு என்ற அடிப்படையில் புதிய நிர்வாகி தேர்வு செய்யப்பட்டுள்ளார் இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாவட்ட செயலாளராக இருந்த பொன்முடி, திமுக துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதை அடுத்து நா.புகழேந்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார் .