ஆன்லைனில் வகுப்பு எடுக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை!
By Aruvi | Galatta | May 27, 2020, 02:21 pm
தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு பாடம் எடுக்கக்கூடாது என்று அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, 4 வது முறையாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு வரும் 31 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. ஆனாலும், ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே, கொரோனா பாதிப்பு மற்றும் அதன் தீவிர பரவல் காரணமாக தமிழகத்தில் வழக்கமாக ஜூன் மாதத்தில் திறக்கப்படும் பள்ளிகள், இந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் திறக்கப்படும் என்று கூறப்படுகிறது.
அத்துடன், பள்ளிகள் சில மாதம் தாமதமாகத் திறக்கப்படுவதால், பாடத்திட்டத்தைக் குறைப்பது தொடர்பாக ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட உள்ளது. இந்த குழு தரும் அறிக்கையின் அடிப்படையில் பாடத்திட்ட குறைப்பு பற்றி முடிவெடுக்கப்படும் என்றும், தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதேபோல், கொரோனா தொற்றின் தீவிரம் அதிகமாக உள்ள காரணத்தால், பள்ளிகள் திறக்கப்பட்டாலும் மாணவர்களை நெருக்கமாக அமரவைத்து வகுப்புகளை நடத்துவது சவாலாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது.
இதனால், ஒன்றாம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை காலையிலும், 6 ஆம் முதல் 12 ஆம் வகுப்பு வரை பிற்பகலிலும் வகுப்புகள் நடத்தப் பள்ளிக்கல்வித் துறை பரிசீலித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே, ஜூன் 1 ஆம் தேதி முதல் ஆன்லைன் வழியே வகுப்புகள் நடத்த தனியார் பள்ளிகள் திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியானது.
இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், “தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்குப் பாடம் எடுக்கக்கூடாது” என்று வலியுறுத்தினார்.
மேலும், “ஆன்லைன் வகுப்புகள் எடுக்கும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.
குறிப்பாக, “ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்போது, கல்வி கட்டணத்தை வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் அமைச்சர் செங்கோட்டையன், எச்சரிக்கை விடுத்துள்ளார்.