அனைத்து தரப்பு பொறியாளர்களும் ஊதிய உயர்வுக்கான கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். இந்த சூழலில் ஏற்கனவே பெற்று வருகிற ஊதியத்தை குறைப்பது என்பது சரியான அணுகுமுறை அல்ல என்று பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டி வந்தனர். 

இந்நிலையில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
’’ அரசு எந்திரத்தின் பணிகளை தொடக்க நிலையில் தங்களின் தோள்களில் சுமந்து செயல்படும் நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை உதவிப் பொறியாளர்களுக்கு முதலமைச்சராக மட்டுமின்றி அந்தத் துறைகளின் அமைச்சராகவும் இருக்கிற பழனிசாமி,  அரசு உதவிப் பொறியாளர்களை தன் வழக்கமான பாணியில் நம்பவைத்து கழுத்தறுத்திருக்கிறார். 


அனைத்து தரப்பினரும் கோரிக்கை வைத்த பிறகும் அரசு உதவிப் பொறியாளர்களுக்கான ஊதிய குறைப்பில் எடப்பாடி பழனிசாமி அரசு பிடிவாதம் காட்டுவது கொஞ்சமும் மனசாட்சி இல்லாத செயலாகும்.  


உலகத்தில் வேறெங்கும் நிகழாத கொடுமையாக ஊதிய உயர்வு கேட்டவர்களுக்கு ரூ.15,000 வரை ஊதியத்தைக் குறைத்து ஹிட்லரை விட மோசமானவராக முதலமைச்சர் பழனிசாமி நடந்து கொண்டிருக்கிறார். 


இவ்வளவு கோரிக்கைகள் எழுந்த பிறகாவது இதுகுறித்த தமது முடிவை பழனிசாமி அரசு மாற்றிக் கொள்ள வேண்டும். அரசு உதவிப் பொறியாளர்களுக்கு ஏழாவது ஊதியக்குழு அடிப்படையில் ஊதிய விகிதத்தை திருத்தியமைத்து அறிவிக்கவேண்டும்”  என்று கூறியிருக்கிறார்.