அதிமுகவை வழிநடத்த 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி இன்று காலையில் அறிவித்தார்.

கடந்த செப். 28-ம் தேதி நடைபெற்ற அதிமுக செயற்குழு கூட்டத்தில் முதல்வர் வேட்பாளர் சர்ச்சை பெரும் விவாதமாகவே வெடித்தது. எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் இருவரும் நேரடியாகவே காரசாரமாக வாக்குவாதத்தில் ஈடுபட, முதல்வர் வேட்பாளர் குறித்த அறிவிப்பு அக்.7-ம் தேதி (இன்று) வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இரு தரப்புக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்றன.

இந்நிலையில், இன்று (அக். 7) முதல்வர் வேட்பாளர் அறிவிப்புக்காக, சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதிகாலை முதலே ஓபிஎஸ்-இபிஎஸ் ஆதரவாளர்கள் அங்கு குவியத்தொடங்கினர். இருவருக்கும் ஆதரவான முழக்கங்களை அவரது ஆதரவாளர்கள் எழுப்பினர்.

இதையடுத்து, அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, கட்சித் தொண்டர்கள் மத்தியில் பேசினார். அப்போது, அதிமுகவின் வழிகாட்டுதல் குழுவை இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார் எனவும், முதல்வர் வேட்பாளரை ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அறிவிப்பார் எனவும் தெரிவித்தார். பின்னர் ஓ.பன்னீர்செல்வம் வந்து, எடப்பாடி பழனிச்சாமிதான் முதல்வர் வேட்பாளர் என தொண்டர்கள் மத்தியில் அறிவித்தார். இதைத்தொடர்ந்து, அவைத்தலைவர் மதுசூதனனுக்கு உடல்நலம் சரியில்லாததால் வரவில்லை எனவும், அவர் சம்மதத்துடனேயே இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கே.பி.முனுசாமி தெரிவித்தார்.

இதையடுத்து, எடப்பாடி பழனிசாமி, அதிமுகவின் வழிகாட்டுதல் குழுவை அறிவித்தார். அப்போது, அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனையின் அடிப்படையில் 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

வழிகாட்டுதல் குழுவில் இடம்பெற்றோர்

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

அமைச்சர் தங்கமணி

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

அமைச்சர் ஜெயக்குமார்

அமைச்சர் சி.வி.சண்முகம்

அமைச்சர் ஆர்.காமராஜ்

ஜே.சி.டி.பிரபாகர், முன்னாள் எம்எல்ஏ

பி.ஹெச்.மனோஜ் பாண்டியன், முன்னாள் எம்.பி.

மோகன்

கோபால கிருஷ்ணன்

மாணிக்கம்

ஆகியோர் அதிமுகவின் வழிகாட்டுதல் குழுவில் இடம்பெற்றுள்ளனர்

இந்தக்குழுவில் இடம் பெறுவோர் எடுக்கும் முடிவுகளை கட்சியை வழிநடத்தும். அதிமுகவை நிறுவிய எம்.ஜி.ஆர்., தொடர்ந்து கட்சியின் பொதுசெயலராக இருந்த ஜெயலலிதா காலத்தில் இந்தக்குழு என்பது கட்சியில் இல்லாமல்தான் இருந்தது. தற்போது வழிக்காட்டுக்குழு அமைக்கப்பட்டுகிறது.

வழிக்காட்டுக்குழு என்பது இந்தியாவில் உள்ள முக்கிய அனைத்துக்கட்சிகளிலும் வேறு, வேறு பெயர்களில் உள்ளன. அதாவது பா.ஜ.,வை பொறுத்தவரை மையக்குழு என்றும் , காங்கிரசில் காரியக்கமிட்டி என்றும், கம்யூனிஸ்ட் கட்சியில் பொலிட்பீரோ, திமுகவில் உயர் செயல்திட்டக்குழு என்றும் அமைப்புகள் உள்ளன. இந்த கமிட்டி கட்சியின் அதிகார மையமாக இருக்கும். நிர்வாகிகள் நியமனம், வேட்பாளர்கள் தேர்வு என எதுவாக இருந்தாலும் கட்சியின் இறுதி முடிவாகவும் இருக்கும் .