கணவனும் - கொழுந்தனும் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததால், “கொரோனா” எனக் கூறி ஆம்புலன்ஸில் ஏறி அந்த பெண், பெங்களூருவில் இருந்து டெல்லிக்குத் தப்பிச் சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
பெங்களூரு பொம்மனஹள்ளி பகுதியில் கொரோனா பாதிப்பு அதிக அளவில் உள்ளதால், வீடு வீடாகச் சென்று மாநகராட்சி சார்பில் பொது மக்களுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறோம்” என்ற கூறி, கடந்த 3 ஆம் தேதி 28 வயதான பெண்மணி ஒருவரின் வீட்டிற்கு, முழு கவச உடைகளை அணிந்து கொண்டு 4 பேர், ஆம்புலன்ஸில் உடன் சென்று உள்ளனர். அப்போது, குறிப்பிட்ட அந்த 28 வயதா பெண், அவருடைய குடும்ப உறுப்பினர்கள், அக்கம் பக்கத்தில் வசிக்கும் மக்கள் என பலருக்கும் கொரோனா பரிசோதனை செய்து விட்டு, அங்கிருந்து அவர்கள் சென்று விட்டனர். 

இதன் தொடர்ச்சியாக மறு நாள் மீண்டும் அப்பகுதிக்கு ஆம்புலன்ஸில் வந்த 2 பேர், “குறிப்பிட்ட அந்த 28 வயது பெண்ணுக்கு மட்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளதால், அவரை மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் செல்ல வந்திருப்பதாகவும் கூறி உள்ளனர்.

இதனையடுத்து, சம்மந்தப்பட்ட பெண்ணை, அவருடைய குடும்பத்தினரே ஆம்புலன்ஸில் அனுப்பி வைத்து உள்ளனர். அத்துடன், “இந்த பெண்ணிற்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாகவும், செல்போனை உடன் கொண்டு செல்வதற்கு அனுமதி இல்லை” என்றும், ஆம்புலன்ஸில் வந்த 2 பேரும் கூறியதால், அந்தப் பெண் செல்போனை எடுத்துக் கொள்ளாமல் ஆம்புலன்ஸில் ஏறிச் சென்று உள்ளார். 

அதன் பிறகு, மறுநாள் காலையில் அந்த பெண்ணின் உடல் நிலை குறித்து அறிந்துகொள்ள அந்த பெண்ணின் கணவர், சம்மந்தப்பட்ட தனியார் மருத்துவமனைக்கு சென்று பார்த்து உள்ளார். ஆனால், பொம்மனஹள்ளியில் இருந்து எந்த ஒரு பெண்ணும் கடந்த 4 நாட்களாக இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை என்று மருத்துவமனை தரப்பில் கூறி உள்ளனர். அதே போல், அப்பகுதி மாநகராட்சி சார்பில் “பொம்மனஹள்ளியில் வீடு, வீடாக கொரோனா பரிசோதனை நடத்தப்பட வில்லை என்றும், பொம்மனஹள்ளியில் கொரோனா பாதித்தவர்களை தங்களுடைய மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கும்படி மாநகராட்சியிடம் இருந்து எந்த உத்தரவும் வரவில்லை” என்றும், அவர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

இதனைக்கேட்டு கடும் அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண்ணின் கணவர், வேறு சில மருத்துவமனைகளில் விசாரித்து உள்ளார். அப்போதும், அவருடைய மனைவி
பற்றிய எந்த தகவலும் அவருக்கு கிடைக்க வில்லை. இதனால் கொரோனா பாதிப்பு இருப்பதாகக் கூறி மர்ம நபர்கள், தன் மனைவியைக் கடத்தி சென்றிருக்கலாம் என்று, அவருக்கு சந்தேகப்பட்டு, அந்த பெண்ணின் கணவர் பொம்மனஹள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், கடத்தப்பட்ட பெண்ணை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

மேலும், காணாமல் போன அந்த பெண் தொடர்பான செய்தி ஒன்று, அந்த மாநிலத்தின் செய்தித்தாளிலும் வெளியானது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த பெண், பொம்மனஹள்ளி காவல் நிலைய ஆய்வாளரை தொடர்புகொண்டு பேசி உள்ளார். அப்போது பேசிய அவர், “நான் காணாமல் போகவில்லை என்றும், வீட்டை விட்டு வெளியேறி உள்ளதாகவும், ஆம்புலன்ஸில் ஏறி வந்தது என் கணவருக்காக நான் நடத்திய நாடகம்” என்றும், கூறி உள்ளார்.

மேலும், “என் கணவனும் அவரது சகோதரரும், தினமும் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்து என்னைக் கொடுமைப் படுத்தி வந்தனர் என்றும், இதனால் அங்கிருந்து தப்ப நினைத்த நான், என் தோழியின் ஆலோசனையின் படி, கொரோனா என்று பொய்சொல்லி ஆம்புலன்ஸில் ஏறி, பெங்களூருவில் இருந்து டெல்லிக்கு தப்பிச் வந்துள்ளதாகவும்” கூறி உள்ளார்.

அத்துடன், “என்னை இனி தேட வேண்டாம் என்றும், நான் இனி அங்கே திரும்பி வர விரும்பவில்லை” என்றும், அந்த பெண் திட்டவட்டமாகக் கூறி உள்ளனர்.

இதனையடுத்து, இந்த தகவலை போலீசார், அந்த பெண்ணின் கணவரிடமும், அவரது குடும்பத்தாரிடமும் கூறியுள்ளனர்.

அதே நேரத்தில், வீட்டைவிட்டுத் தப்பிச் சென்ற பெண், தன் கணவர் மீதும் அவரது சகோதரர் மீதும் புகார் அளிக்க விரும்பவில்லை என்பதால், அது தொடர்பாக எங்களால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை என்றும், அப்படி புகார் அளித்தால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர். எனினும், அந்த பெண்ணின் கணவர் அளித்த புகாரின் படி, வீட்டை விட்டுத் தப்பிச் சென்ற பெண்ணை தேடி வருவதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம், அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.