மருத்துவ படிப்பில் சேரவிரும்பும் மாணவர்கள், கட்டாயம் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற நிலை இருக்கின்றது. தமிழகத்தில் மாநில அரசு நீட் தேர்வுக்கு எதிராக பேசிவரும் போதும், மத்திய அரசு நீட்டை நடத்துவதில் மிகவும் ஆர்வத்தோடு இருக்கிறது. அதன்படி கடந்த மே மாதம் 3ஆம் தேதியே இந்தியாவில் நீட் நடக்கவிருந்தத்து. இருப்பினும் கொரோனா முடக்கம் காரணமாக அது ஒத்தி வைக்கப்பட்டது. அப்படி ஒத்திவைக்கப்பட்ட தேர்வு, நாளை நடக்கவிருக்கிறது. தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்புகளிலும் இருந்து எழுந்த எதிர்ப்பையும் மீறி நாளை தேர்வு நடக்கிறது.

இதன்படி நாளை மதியம் 2 மணி முதல் 5 மணி வரை தேர்வு நடக்கவுள்ளது. நாடு முழுவதும் 3,842 மையங்களில் 15,97,433 மாணவர்கள் இந்த தேர்வை எழுதுகின்றனர். தமிழ்நாட்டில் 238 தேர்வு மையங்களில் 1,17,990 மாணவர்கள் தேர்வு எழுதவுள்ளனர். ஏற்கனவே ஹால் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டுள்ளது. 

தற்போதுள்ள சூழ்நிலையில் தேர்வை நடத்த வேண்டாம் என தமிழகம் தவிர்த்தும் சில மாநில அரசுகள், அரசியல் கட்சி தலைவர்கள், பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இருப்பினும், தேர்வு நடத்தியே தீருவோம் என்ற முனைப்பில் மத்திய அரசு தீவிரமாக பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையில், தற்போது சில தேர்வு மையங்களை மாற்றி இருப்பதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. தமிழகத்தில், வேலூரில் 2 தேர்வு மையங்கள் மாற்றப்பட்டுள்ளன. இதுகுறித்த அறிவிப்பு அந்தந்த தேர்வர்களுக்கு குறுஞ்செய்தி வாயிலாக தெரிவிக்கப்பட்டுவிட்டதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

கொரோனா நோய்த் தொற்று இருக்கும் காரணத்தினால் தேர்வர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கின்றன. இதுதொடர்பாக மாணவர்களின் ஹால் டிக்கெட்டோடு கட்டுப்பாடுகள் மற்றும் மாணவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் இணைக்கப்பட்டு இருக்கின்றன. அதனை மாணவ-மாணவிகள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) தெரிவித்துள்ளது.

தேர்வர்கள் தேர்வு அறைகளுக்கு செல்வதற்கு முன்பு அவர்களின் உடல் வெப்பநிலை சரிபார்க்கப்படும். 99.4 டிகிரிக்கு மேல் தேர்வர்களின் உடல்வெப்ப நிலை இருக்கும் பட்சத்தில், 20 நிமிடம் தனியாக அமரவைக்கப்படுவார்கள். அதன்பிறகும் உடல் வெப்பநிலை குறையாத பட்சத்தில் தனிஅறையில் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள்.

தேர்வர்கள் கையில் 50 மில்லி அளவுகொண்ட கிருமிநாசினி திரவம், வெளிப்படையான வாட்டர் பாட்டில், கையுறைகள், தேர்வுக்கு தேவையான ஆவணங்கள் எடுத்துச்செல்லலாம். தேர்வு அறையில் தேசிய தேர்வு முகமை சார்பில் முககவசம் வழங்கப்படும். அந்த முககவசத்தை தான் தேர்வர்கள் அணிந்து தேர்வு அறைக்குள் செல்லவேண்டும்.

மாஸ்க், கையுறை, முகத்தை மறைக்கும் ஷீல்ட், இறுக்கமில்லாத ஆடைகளை தேர்வெழுத செல்லும் மாணவர்கள் அணிந்து செல்ல வேண்டும். ஜீன்ஸ், சல்வார், நீளமான ஸ்கர்ட், டிரவுசர், டி சர்ட்ஸ், சர்ட் ஆகியவற்றை அணிந்து வரலாம் முழுக்கை சட்டை, பெரிய பட்டன் கொண்ட சட்டைகள், அடர் நிறம் கொண்ட ஆடைகளை அணியக் கூடாது. கட்டாயம் ஷூ அணிந்து வரக் கூடாது. செருப்பு அணிந்து வரலாம் நகைகளை அணிந்து வரக் கூடாது. மதம் சார்ந்த நகைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தலையில் ஸ்கார்ப் மற்றும் தலைப்பாகை அணிந்து வரலாம், ஆனால், பரிசோதிக்கப்படுவார்கள். வாட்ச் எந்த காரணம் கொண்டும் அணிந்து வரக் கூடாது.

அதேபோல், தேர்வு முடிந்ததும், ஹால் டிக்கெட்டில் கேட்டு இருக்கும் விவரங்களை சரியாக பூர்த்திசெய்து, தேர்வு அறை கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும். மாணவர்கள் தேர்வு மைய வளாகத்தில் தேர்வர்கள் சமூக இடைவெளியை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்பது முதன்மையான கட்டுப்பாடாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

இத்தனை கட்டுப்பாடுகளோடு, நாளை நீட் தேர்வு நடக்கவிருக்கிறது.