கொரோனா வைரஸ் தொற்றால் பொருளாதாரம் முற்றிலும் முடங்கியது. வேலைவாய்ப்பின்மை ஏற்பட்டு பெரும்பாலான மக்கள் திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் ‘EMI’ கட்ட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. ஏப்ரல், மே மாதங்களில் ‘EMI’ கட்ட அவகாசம் வழங்கப்பட்டது. ‘EMI’ கட்ட அவகாசம் வழங்கினாலும், வட்டிக்கு வட்டி வசூலிக்கும் நடைமுறையில் வங்கிகள் இறங்கின.

இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது உச்சநீதிமன்றம் மத்திய அரசை கண்டித்ததுடன் பதில் அளிக்க உத்தரவிட்டது.

அந்த பதிலை, இன்று மத்திய அரசு நீதிமன்றத்தில் அளித்துள்ளது. அதில், ``வங்கிக் கடனுக்கான வட்டிக்கு வட்டியை தள்ளுபடி செய்ய முடியாது" என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மேலும், கடன் தொகையை திருப்பி செலுத்துவதற்கான அழுத்தத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. 

கொரோனா ஊரடங்கு காலத்தில் வங்கிகளில் பெறப்பட்ட தனிநபர் கடன், வீட்டுக் கடன், வாகனக் கடன், கடன் அட்டை மீதான கடன் உள்ளிட்ட அனைத்துத் தவணைகளையும் செலுத்துவதில் இருந்து கால அவகாசம் அளிக்கப்பட்டது. ஏற்கனவே வாங்கிய கடன் வட்டிக்கு, மேலும் வட்டி வசூலிக்க வங்கிககள் முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில், தற்போது 2 ஆண்டுகளுக்கு காலநீட்டிப்பு செய்ய முடியும் என்று மத்திய அரசு கூறியிருப்பது மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் அமைந்தது. இருப்பினும், கடனுக்கான வட்டியைச் சேர்த்து வசூலிக்கும்போது செலுத்த வேண்டிய தவணைக் காலம் அதிகரிப்பதோடு, கடன், வட்டி சுமை அதிகரிக்கும். இதைப் பல்வேறு தரப்பினரும் சுட்டிக் காட்டினர். சலுகை என்றால் குறைந்தபட்சம் இந்தக் காலகட்டத்துக்கான வட்டியை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டது.

இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் ஊரடங்கில் செலுத்தாத தவணையின் வட்டி மீது கூடுதல் வட்டி வசூலிப்பதை தடுக்க கோரி வழக்கு தொடரப்பட்டது. நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அதில் வங்கிக் கடனுக்கான வட்டிக்கு வட்டியை தள்ளுபடி செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. பொருளாதாரத்தை வலுவிழக்கும் வகையில் முடிவெடுக்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எல்லா துறைகளும் பாதிக்கப்பட்டாலும் ஒவ்வொரு துறையின் பாதிப்பும் வெவ்வேறாக உள்ளது. ஆகஸ்ட் 31ம் தேதி வரை EMI கட்டாதோர் கணக்குகள் கடனை திருப்பி செலுத்தாதவர்கள் பட்டியலில் சேர்க்கப்படாது.

இதனையடுத்து, வட்டிக்கு வட்டி விவகாரத்தில் மத்திய அரசு இதுவரை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்றும், எல்லா துறையும் பாதிக்கப்பட்டுள்ளது என்றால், அதுகுறித்து என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும், பேரிடர் மேலாண்மை சட்டத்தில் நடவடிக்கை எடுக்க அதிகாரம் இருந்தும் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என்று வினவி உள்ளனர்.