5 ஆம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்துள்ள நிலையில், டெல்லியில் 11 வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டத்தில் அடுத்தடுத்து உயிரிழப்புகள் நிகழ்ந்து வருவது நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பாஜக தலைமையிலான மத்திய அரசு புதிதாகக் கொண்டு வந்த வேளாண் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் விவசாயிகள் கடும் கொந்தளிப்பு அடைந்து உள்ளனர். இதன் காரணமாக, புதியு வேளாண் சட்டங்களைத் திரும்ப வலியுறுத்தி வட மாநில விவசாயிகள் ரயில் மறியல், பேரணி உள்ளிட்ட பல்வேறு கட்ட போராட்டங்களைத் கடந்த மாதம் முதல் தொடர்ச்சியாக நடத்தி வருகின்றனர்.

குறிப்பாக, மத்திய அரசு கொண்டு வந்த 3 புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், அரியானா உள்ளிட்ட வட மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டு கடந்த 10 நாட்களுக்கும் மேலாகப் போராடி வருகின்றனர்.

அதன் படி, டெல்லியில் புராரி மைதானத்திலும், சிங்கு, திக்ரி, காஜிப்பூர் உள்ளிட்ட எல்லைகளிலும் மத்திய அரசுக்கு எதிராகப் போராடி வரும் விவசாயிகள் போராட்டம் இன்று 11 வது நாளாகத் தொடர்ந்து வருகிறது. 

முக்கியமாக, “இந்த சட்டங்கள் விளை பொருட்களின் குறைந்தபட்ச ஆதரவு விலை, மண்டி அமைப்பு முறையை அழித்து, விவசாய துறையை கார்பரேட்டுகளிடம் தாரைவார்க்கும் என அச்சம் வெளியிட்டு வரும் அவர்கள், இந்த சட்டங்களை உடனடியாக திரும்ப பெற வேண்டும்” என்று மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர். இதற்காக நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை உடனடியாக கூட்ட விவசாய அமைப்புகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மேலும், தங்களது போராட்டத்தின் அடுத்த கட்டமாக வரும் 8 ஆம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.  அன்றைய தினம் சாலைகளின் சுங்கச்சாவடியை முற்றுகையிடுவோம் என்றும் விவசாயிகள் எச்சரித்து உள்ளனர்.

இப்படியாகத் தீவிரமடைந்து வரும் விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசும் முனைப்பாக செயல்பட்டு வருகிறது. விவசாய அமைப்புகளின் அடுத்தடுத்து பேச்சுவார்த்தைகளையும் நடத்தி வருகிறது. அதன் படி, மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், வர்த்தகம் மற்றும் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், வர்த்தக இணை அமைச்சரும், பஞ்சாப் மாநில எம்.பி.யுமான சோம் பர்காஷ் ஆகியோர் அடங்கிய மத்திய அரசு பிரதிநிதிகள் நடத்திய இந்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

இந்த சூழலில் மத்திய அரசுக்கும், விவசாயிகளுக்கும் இடையேயான 5 வது கட்ட பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது. இதில், மத்திய அமைச்சர்களான நரேந்திர சிங் தோமர், பியூஷ் கோயல், சோம் பர்காஷ் ஆகியோர் சேர்ந்து சுமார் 40 விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.

அப்போது, முந்தைய பேச்சுவார்த்தையில் பேசப்பட்ட அம்சங்கள் குறித்து வேளாண் செயலாளர் சஞ்சய் அகர்வால் சுருக்கமாக எடுத்துரைத்தார். அதன் பின்னர் பேசிய மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர், “விவசாயிகள் பிரச்சினையை சுமுக பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க மத்திய அரசு உறுதியாக இருக்கிறது” என்று, குறிப்பிட்டார்.

விவசாயிகளின் உணர்வுகளை நாங்கள் மதிக்கிறோம் என்றும், வேளாண் சட்டங்கள் குறித்த உங்கள் கருத்துகளை வரவேற்கிறோம்” என்றும், அவர் தெரிவித்தார். ஆனால், விவசாயிகள் இந்த 3 சட்டங்களையும் திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கையில் உறுதியாக இருந்தனர். ஒரு கட்டத்துக்கு மேல் தங்கள் கோரிக்கை ஏற்கப்படாததால் விவசாயிகள் அனைவரும் கூட்டத்தில் மவுன விரதம் கடைப்பிடித்தனர். அந்த வகையில் சில பிரதிநிதிகள் தங்கள் உதடுகளில் விரலை வைத்திருந்தனர். தங்களது மவுன போராட்டத்தையும், அங்கும் தொடர்ந்தனர்.

குறிப்பாக, “3 சட்டங்களும் திரும்ப பெறப்படுமா? இல்லையா? என்ற கேள்விக்கு “ஆம் அல்லது இல்லை” என்று அரசு பதிலளிக்குமாறு விவசாயிகள் வலியுறுத்தினர். இதை குறிக்கும் வகையில், “ஆம் அல்லது இல்லை” என்ற வாசகம் பொறிக்கப்பட்ட காகிதத்தையும் விவசாயிகள் ஏந்தி பிடித்தனர்.

விவசாயிகளின் இந்த துல்லியமான கேள்விக்கு மத்திய அமைச்சர்களால் எந்த பதிலும் அளிக்க முடியவில்லை. விவசாயிகளிடம் பதில் சொல்ல முடியாமல் அவர்கள் திணறினார்கள். அதே நேரத்தில், விவசாயிகளின் மவுனத்தைக் கலைத்து அவர்களை பேச வைக்கவும் அவர்கள் முயன்றனர். ஆனால், விவசாயிகள் தங்கள் மவுனத்தை கடைசி வரை கலைக்கவில்லை.

இதைத்தொடர்ந்து, எந்த வித முடிவும் எட்டப்படாமல் நேற்றைய பேச்சுவார்த்தையும் தோல்வியிலேயே முடிவடைந்தது. எனினும், மீண்டும் 9 ஆம் தேதி சந்தித்து 6 வது கட்ட பேச்சு வார்த்தை நடத்த இரு தரப்பும் ஒப்புக்கொண்டனர்.

இந்நிலையில், “வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறாமல் நாங்கள் ஒரு அடி கூட பின்வாங்கப் போவதில்லை” என்று, விவசாயிகள் டெல்லி எல்லைகளில் முகாமிட்டு உறுதியுடன் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இதனால், பாதுகாப்புப் பணியில் அதிக அளவிலான போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். விவசாயிகள் 

குறிப்பாக, 9 ஆம் தேதி மீண்டும் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டாலும், 8 ஆம் தேதி அழைப்பு விடுத்தபடி, நாடு தழுவிய போராட்டம் நடைபெறும் என்று, விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளது. இதனால், பாஜக தலைமையிலான மத்திய அரசு அதிர்ச்சியடைந்து உள்ளது.

அதே நேரத்தில், டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்தில் அடுத்தடுத்து உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவது, ஒட்டுமொத்த விவசாயிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. போராட்டத்தில் கலந்துகொண்டு வரும் வயது முதிர்வான விவசாயிகள் தற்போது அடுத்தடுத்து உயிரிழந்து வருகின்றனர். இதுவரை 6 விவசாயிகள் அடுத்தடுத்து உயிரிழந்து உள்ளனர். 

அத்துடன், விவசாயிகளின் பிள்ளைகள் பலரும் விவசாயிகளுடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு கொண்டே, ஆன்லைனில் பாடமும் படித்து வருகின்றனர். இந்த சம்பவங்கள் எல்லாம் நாட்டு மக்களிடையே, ஒரு வித உணர்ச்சியைத் தூண்டி விட்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது.