ஆந்திரப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் மற்றும் தெலுகு தேசம் கட்சியின் தலைவராக இருப்பவர், என்.சந்திரபாபு நாயுடு. 

இவர், ஆந்திராவில் சட்டவிரோதமாக அரசியல் கட்சித் தலைவர்கள் தொலைபேசி உரையாடல்கள்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாகவும் இது தொடர்பாக மத்திய அரசு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக சந்திரபாபு நாயுடு பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

``ஆந்திர மாநிலத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் மக்கள் கடும் அச்சுறுத்தலை எதிர்கொண்டு வருகின்றனர். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஜனநாயக அமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. 

மாநில தேர்தல் ஆணையம், அரசு பணியாளர் தேர்வாணையம் மீதான தாக்குதலைத் தொடர்ந்து தற்போது எதிர்க்கட்சி தலைவர்கள், வக்கீல்கள், ஊடகத்தினர் மற்றும் சமூக ஆர்வலர்களை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி மிரட்டி வருகிறது.

குறிப்பாக எதிர்க்கட்சிகள், வக்கீல்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் தொலைபேசிகளை சட்டவிரோதமாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அரசு பதிவு செய்து ஒட்டுக்கேட்கிறது. சட்டவிரோதமாக தொலைபேசி ஒட்டுக்கேட்கப்படுவதை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தெடர்பாக மத்திய அரசு தனி குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும்"

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

இதேபோல் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி எம்பியான ரகு ராம கிருஷ்ண ராஜூவும் தனது இரண்டு செல்போன்கள் கடந்த சில மாதங்களாக  மாநில புலனாய்வுத் துறையினரால் ஒட்டுக்கேட்கப்படுவதாகவும், வெளிநாட்டு எண்களில் இருந்து மிரட்டல் அழைப்புகள் வருவதாகவும் புகார் கூறி உள்ளார். இதுதொடர்பாக அவர் மத்திய உள்துறை செயலாளருக்கு கடிதம் எழுதி உள்ளார்.

ஏற்கெனவே ஆந்திராவில் அரசியல் சூழலில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், இந்த கடிதம் அங்கிருப்போர் இடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.