திருமண ஆசைகாட்டி காதல் வலையில் வீழ்த்தி 2 சிறுமிகளை பலாத்காரம் செய்த 2 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அடுத்த ரெட்டியபட்டி பகுதியில் பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும் 16 வயதுடைய 2 சிறுமிகளை, அதே பகுதியைச் சேர்ந்த சங்கிலி, பொண்ணு பாண்டியன் ஆகிய 2 இளைஞர்களும், திருமண ஆசை வார்த்தைகள் கூறி, 2 சிறுமிகளையும் தங்களது காதல் வலையில் வீழ்த்தி உள்ளனர்.

இதனையடுத்து, 2 இளைஞர்களும் திட்டமிட்டு 2 சிறுமிகளையும் வெளியே ஊர் சுற்றிப் பார்க்கலாம் என்று ஆசை வார்த்தைகள் கூறி, தனியாக அழைத்துச் சென்றுள்ளனர்.

இதனையடுத்து, 2 சிறுமிகளையும் சங்கிலி மற்றும் பொண்ணு பாண்டியன் ஆகிய 2 இளைஞர்களும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இந்த விசயம், சங்கிலியின் தாயார் சீனியம்மாளுக்கு தெரிந்தும், அவர் இதை கண்டுகொள்ளாமல், மகனைத் தவறு செய்யத் தூண்டியதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே, சிறுமிகளை வெகு நேரமாகக் காணாததால், அதிர்ச்சியடைந்த சிறுமிகளின் பெற்றோர், கீழராஜகுலராமன் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், 2 சிறுமிகளையும் தீவிரமாகத் தேடி வந்தனர்.

இந்நிலையில், 2 சிறுமிகளும் சங்கிலி மற்றும் பொண்ணு பாண்டியனுடன் இருந்த நிலையில், 2 சிறுமிகளையும் மீட்ட போலீசார், சங்கிலி, பொண்ணு பாண்டியன் ஆகிய இருவரும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

மேலும், சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்ய உடந்தையாக இருந்த சங்கிலியின் தாயார் சீனியம்மாளையும் போலீசார் அதிரடியாகக் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

அத்துடன், சிறுமிகள் இருவருக்கும் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், 2 சிறுமிகளையும் அவர்களது பெற்றோர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

இதனிடையே, ஆசை வார்த்தைகள் கூறி 2 சிறுமிகளை 2 இளைஞர்கள் திட்டமிட்டே பாலியல் பலாத்காரம் செய்ததால், 2 இளைஞர்கள் உட்பட அவரது தாயாரையும் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.