“மகள்கள் இருக்கிறார்கள்” என்று கூறி திருமணம் செய்ய மறுத்த காதலியை, கள்ளக்காதலன் கொடூரமான முறையில் கொலை செய்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவை நேரு நகர் பகுதியைச் சேர்ந்த திலகவதி, தனது கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 4 ஆண்டுகளாக கணவரைப் பிரிந்து தனது 2 மகள்களுடன் வாழ்ந்து வந்தார்.

இதனிடையே, அதே பகுதியில் கறிக்கடை நடத்தி வந்த பத்மநாபன், சிறுவயதிலிருந்தே திலகவதியின் நண்பன் என்று கூறப்படுகிறது. பத்மநாபனும் கடந்த 2 ஆண்டுகளாகத் தனது மனைவியைப் பிரிந்து தனியாக வசித்து வருகிறார்.

இதனால், கணவனை விட்டு பிரிந்த திலகவதியும், மனைவியை விட்டுப் பிரிந்த பத்மநாபனும் நெருங்கிப் பழகி வந்தனர். இதனால், இவர்களுடைய நட்பு கள்ளக் காதலாக மாறியது.

இதனைத்தொடர்து, தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு திலகவதியை, பத்மநாபன் தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால், “தனக்கு மகள்கள் இருக்கிறார்கள்” என்று கூறி, திருமணம் செய்ய திலகவதி தொடர்ந்து மறுத்து வந்துள்ளார்.

இதனால், கடும் ஆத்திரமடைந்த பத்மநாபன், திலகவதியை சுத்தியலால் தலையில் அடித்து கொடூரமாக கொலை செய்துள்ளார். பின்னர், அவரும் அங்கேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதனையடுத்து, திலகவதி மாயமானதாகக் கூறி, அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் தேடி வந்தனர். அப்போது, அந்த பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில், தகரகொட்டாய் என்ற இடத்திலிருந்து இருவரது சடலங்களையும் போலீசார் மீட்டனர்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசா் விசாரணை மேற்கொண்டபோது, இந்த கள்ளக்காதல் விசயம் வெளிச்சத்துக்கு வந்தது. இதனால், அப்பகுதியில் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது.