2 வது மனைவி மீதான அதீத பாசத்தால், முதல் மனைவியைக் கணவன் கொன்று தீ வைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விழுப்புரம் சுதாகர் நகர் பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியரான நடராஜன், 2 திருமணம் செய்தவர்.

முதல் மனைவி இந்திரா, விழுப்புரத்தில் வசித்து வந்தார். 2 வது மனைவி லீலா திருக்கோவிலூரில் வசித்து வந்துள்ளார். நடராஜன், தனது வசதிக்கு ஏற்றார்போல், 2 வீட்டிலும் மாறி மாறி இருப்பது வழக்கம்.

இதனிடையே, விழுப்புரத்தில் வசித்து வந்த இந்திரா, கடந்த 7 ஆம் தேதி தனது வீட்டில் பாதி உடல் எரிந்த நிலையில், கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுக் கிடந்துள்ளார்.

இது தொடர்பாகப் பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து, விரைந்து வந்த போலீசார், உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், உயிரிழந்த இந்திராவின் கணவர் நடராஜன் மீது சந்தேகப்பட்டனர். இது தொடர்பாக சில நாட்கள் அவரை கண்காணித்து வந்த போலீசார், அவரை அழைத்து விசாரித்தனர்.

விசாரணையில், இந்திராவை நடராஜன் கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், தனது 2வது மனைவி லீலா மீது கொண்டிருந்த அதீத அன்பினால், இந்திராவை கொலை செய்ததாக நடராஜன் வாக்கு மூலம் அளித்துள்ளார். இதனைக் கேட்ட போலீசார் அதிர்ச்சியில் உரைந்தனர். பின்னர், அவரை கைது செய்த போலீசார், இந்த கொலை சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்றும் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, 2 வது மனைவி மீதான அதீத பாசத்தால், முதல் மனைவியைக் கணவன் கொன்று தீ வைத்து எரித்துள்ள சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.