கொலுசை அடகுவைத்துக் குடித்த கணவனை, மனைவி பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலத்தைச் சேர்ந்த 36 வயதான செந்தில், அப்பகுதியில் கொத்தனார் வேலை செய்து வந்தார். இவருக்கு 33 வயதில் சித்ரா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.

இதனிடையே மதுப்பழக்கத்திற்கு அடிமையான செந்தில், நாள்தோறும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து, மனைவியுடன் சண்டைபோடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, மனைவி சித்ராவின் வெள்ளிக் கொலுசை வீட்டிலிருந்து திருடி, அங்குள்ள அடகுக் கடையில் 1500 ரூபாய்க்கு அடகு வைத்து, கடந்த 2 நாட்களாகத் தொடர்ந்து குடித்துள்ளார்.

இதனையடுத்து, அடகு வைத்த பணம் தீர்ந்ததும் 2 நாட்களுக்குப் பிறகு நேற்று அவர் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, கொலுசைத் திருடி அடகு வைத்துக் குடித்தது மனைவி சித்ராவிற்குத் தெரியவந்தது.

இதனால், கடும் ஆத்திரமடைந்த சித்ரா, அவரது இருசக்கர வாகனத்தில் இருந்த பெர்ரோலை ஒரு கேனில் பிடித்துள்ளார். பின்னர், போதையில் வீட்டில் புலம்பிய படி படுத்திருந்த கணவர் செந்தில் மீது ஊற்றி, கண் இமைக்கும் நேரத்தில் தீ வைத்து எரித்துள்ளார்.

செந்தில் மீது தீ பற்றி எரிந்த நிலையில், அவர் அலறித்துடிக்கவே, அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் ஓடிவந்து, அவரை மீட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்குத் தீவிரமாகச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், அவருக்கு 50 சதவீதத்திற்கும் மேல் தீ காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், சித்ராவிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.